டர்பன்: இந்திய அணிக்கு எதிரான 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. 16 ஓவர்கள் வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், கடைசி 3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை கைப்பற்றியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி ஜார்க் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் 45 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 39 ரன்களை மட்டுமே சேர்த்தார். இந்திய அணி மொத்தமாக 62 டாட் பால்களை விளையாடியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரிக்கல்டன் - ஹென்ரிக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்த நிலையில், ரிக்கல்டன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்ரிக்ஸ் - மார்க்ரம் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடியது. வழக்கம் போல் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 2வது பந்திலேயே மார்க்ரம் 3 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசிய 8வது ஓவரில் ஹென்ரிக்ஸ் 24 ரன்களில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கிளாசன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென மார்கோ யான்சன் களமிறங்கினார்.
இதனால் இந்திய அணி வீரர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி சுழலில் யான்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கிளாசன் வந்தார். அதன்பின் ரவி பிஷ்னாய் வீசிய 12வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், வருண் சக்கரவர்த்தி தனது கடைசி ஓவரை வீச மீண்டும் வந்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே கிளாசன் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த மில்லர் அடுத்த பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, தென்னாப்பிரிக்கா அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த சிமிலானே 7 ரன்களில் வெளியேற, மொத்த பொறுப்பும் இளம் வீரர்களான ஸ்டப்ஸ் - கோட்ஸி தலையில் விழுந்தது.
அப்போது தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 37 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நேரத்தில் 17வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 12 ரன்களை விட்டுக் கொடுத்தார். பின்னர் ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரிலும் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.
பின்னர் அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய ஸ்டப்ஸ் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் 41 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலமாக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன.