டர்பன்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் சேர்க்கப்படாமல் சுப்மன் கில், திலக் வர்மா, குல்தீப் யாதவ், சிராஜ், ஜடேஜா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருது வென்றும் ரவி பிஷ்னாய் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
டாஸ் வென்ற பின் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். பிட்ச் பெரும்பான்மை நேரம் மூடப்பட்டு இருந்தது. அதனால் தொடக்க நேரத்தில் கொஞ்சம் டர்ன் இருக்கும் என்று நினைக்கிறேன். 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்குவதால் எங்களுக்கு ஒவ்வொரு போட்டியுமே முக்கியமான ஒன்றாகும். இன்றைய போட்டியில் எந்த வீரரும் அறிமுகம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், தென்னாப்பிரிக்காவில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்துடன் இருந்தோம். இப்போது முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி தான். இந்த போட்டியில் விளையாடும் அனைவருக்குமே சிறந்த வாய்ப்பு தான் இது. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 5 முதல் 6 மாதங்கள் உள்ளது. மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது தான் அணிக்கு சொல்ல கூடிய ஒன்று என்று கூறினார்.
இந்திய அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா அணி விவரம்: மேத்யூ, ஹென்ரிக்ஸ், மார்க்ரம், கிளாஸன், மில்லர், ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், பெலுக்வாயோ, கொயட்சே, வில்லியம்ஸ், ஷம்சி