இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்த தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரு போட்டிகள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது.
கொரோனா வைரஸ் தாக்கம்
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்தது. இந்திய அரசு விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாம். அப்படியே நடத்தினாலும் ரசிகர்கள் இல்லாமல் நடத்துமாறு கூறி இருந்தது. இந்த நிலையில், கடைசி இரு போட்டிகளும் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
தொடர் ரத்து
எனினும், பின்னர் பிசிசிஐ - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு இரண்டும் தொடரை ரத்து செய்ய முடிவு செய்தன. முதல் போட்டியும் நடக்காத நிலையில் இந்த ஒருநாள் தொடர் பின்னர் ஒரு சமயம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
முதல் திட்டம்
கொரோனா அச்சம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியை விரைவாக நாட்டை விட்டு அனுப்ப திட்டமிட்டது பிசிசிஐ. அதனால், அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே இருந்து முதல் விமானத்தில் தென்னாப்பிரிக்க கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
திடீர் மாற்றம்
ஆனால், இந்த திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மூன்றாவது போட்டி நடைபெற இருந்த கொல்கத்தாவில் இருந்து தென்னாப்பிரிக்கா தங்கள் நாட்டுக்கு கிளம்ப உள்ளது. இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. பயண திட்டத்தை மாற்றுவதில் ஏதோ சிக்கல் இருந்துள்ளது.
கொல்கத்தாவில் தங்க வேண்டும்
முன்பு திட்டமிட்டபடி செவ்வாய் அன்று கொல்கத்தாவில் இருந்து தென்னாப்பிரிக்க அணி அவர்கள் நாட்டுக்கு கிளம்ப உள்ளனர். இதற்காக அவர்கள் திங்கள் அன்று காலை கொல்கத்தாவுக்கு வர உள்ளனர். அதன் பின் அவர்கள் எந்த ஹோட்டலில் தங்குவது என்பது தான் இப்போது பிரச்சனை ஆகி உள்ளது.
என்ன முடிவு?
மூன்றாவது போட்டி நடக்க இருந்த ஈடன் கார்டன் மைதானத்துக்கு அருகே இருந்த ஹோட்டலில் தான் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்க இருந்தனர். ஆனால், இப்போது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விமான நிலையத்துக்கு அருகே தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பீதியில் தென்னாப்பிரிக்க வீரர்கள்
அதிகாரிகள், காவல்துறையினர் இடையே இதில் குழப்பம் உள்ளது. தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்கே தங்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் இந்தியாவில் சிக்கி இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்து எங்கே தங்கப் போகிறோம் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
பிசிசிஐ தான் காரணம்
பிசிசிஐ கொரோனா பரவிய நேரத்திலும் இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரை நடத்த விரும்பியதால் தான் தென்னாப்பிரிக்க வீரர்கள் இப்போது இந்தியாவில் மாட்டிக் கொண்டார்கள். பிசிசிஐயின் பேராசை தான் இதற்கு காரணம் என ஒரு தரப்பு ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகிறர்கள்.