அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், இந்தப் போட்டியில் இந்திய பேட்டர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
188 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் 12 போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்திய வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக பேட்டை சுழற்றியதே தோல்விக்குக் காரணம் என்று சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் எப்படி விக்கெட் விழுந்த பிறகு நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தார்களோ, அதிலிருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்கவில்லை என்று அவர் கூறினார்.
இது குறித்துப் பேசிய கவாஸ்கர், "தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஆடிய விதத்தைப் பாருங்கள். பந்து பேட்டிற்கு வருவதற்குச் சற்று தாமதமாவதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அதனால் குறுக்கு ஷாட்களை ஆடாமல், நேராக (V-shape) விளையாடினார்கள். ஆனால் இந்திய வீரர்கள் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எல்லா பந்துகளையும் தூக்கி அடிக்க நினைத்தார்கள். அதுதான் அவர்களுக்கு வினையாக முடிந்தது" என்று ஆதங்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் பேசுகையில், இந்திய அணி சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டது என்றார். "இந்தியாவின் ஆட்டத்தில் எனக்குப் பெரிய ஏமாற்றம் என்னவென்றால், அவர்கள் ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இங்கு மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளதால், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்."
"ஆனால் இந்தியா அந்தப் புரிதல் இல்லாமல் ஆடியது. தொடக்கத்தில் பந்து சற்று நின்று வந்தபோது, அந்த அழுத்தத்தைச் சமாளித்து நிதானமாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் அவசரப்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள்" என்று பொல்லாக் தெரிவித்தார்.
இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தத் தோல்வியால் இந்தியாவின் ரன் ரேட் -3.800 ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.