அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்று கவாஸ்கர் கணித்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக அக்ஷர் களமிறங்குவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அக்ஷர் படேல், 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டன் ஆவார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி குறித்து பேசிய கவாஸ்கர், "சூப்பர் 8 போட்டிகளுக்கு அக்ஷர் படேல் நிச்சயம் பிளேயிங் லெவனில் திரும்புவார் என்று நான் நினைக்கிறேன். அவர் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக வருவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

"வாஷிங்டன் சுந்தர் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்பதே என் கணிப்பு. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சுழலுக்குத் துளியும் சாதகமில்லாத பிட்ச்சில், அணி நிர்வாகம் குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் போகலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் குல்தீப் அதிகம் விளையாடவில்லை" என்றும் அவர் விளக்கினார்.
"எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்து பந்தை அடிக்கும் திறமை வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு சாதகமான அம்சமாகும். இதனால், அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக அக்ஷர் படேலின் வருகை மட்டுமே மாற்றமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்" என்றார். இந்தியாவின் சூப்பர் 8 போட்டி அட்டவணை: பிப்ரவரி 22 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா – அகமதாபாத்; பிப்ரவரி 26 – இந்தியா vs ஜிம்பாப்வே – சென்னை; மார்ச் 1 – இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் – கொல்கத்தா.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கடந்து வந்த பாதை: பிப்ரவரி 7 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிப்ரவரி 12 அன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது.
அதேபோல், பிப்ரவரி 15 அன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிப்ரவரி 18 அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குழு நிலைப் போட்டிகளில் தோல்வியின்றி ஆதிக்கம் செலுத்தியதன் மூலம், இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்தது.