அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சந்தித்த தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் வரிசையில் களமிறங்கிய திலக் வர்மாவின் பேட்டிங் அணுகுமுறையை முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். பொறுமை காக்க வேண்டிய நேரத்தில் தவறான ஷாட் ஆடி அவர் விக்கெட்டைப் பறிகொடுத்தது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
188 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்ததால் திலக் வர்மா முன்கூட்டியே களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்பட்ட நிலையில், ஆடுகளத்தைப் புரிந்துகொண்டு நிதானமாக ஆட அவருக்குப் போதிய நேரம் இருந்தது.
ஆனால், மார்கோ யான்சன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே கிரீஸை விட்டு வெளியேறி அதிரடியாக ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் அவர் கேட்ச் ஆனார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே அவர் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அணியின் நெருக்கடியை அதிகரித்தது.

இந்தப் போட்டி முடிந்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய சுனில் கவாஸ்கர், திலக் வர்மாவின் இந்த அவசர முடிவைக் கேள்வி எழுப்பினார். "அவர் ஒரு புத்திசாலித்தனமான பேட்டர். ஆனால் இந்தப் போட்டியில் அவரது அணுகுமுறை எனக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஏற்கனவே ஒரு விக்கெட் விழுந்துவிட்டது. தேவையான ரன் ரேட் ஓவருக்கு 9.5 ஆகத்தான் இருந்தது, 15 ரன்கள் தேவை என்பது போல் அவசரப்படத் தேவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மறுமுனையில் அபிஷேக் சர்மாவும் ரன் எடுக்கத் திணறி வந்ததால், அவருடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு திலக் வர்மாவுக்கு இருந்தது. பவர் பிளே முடியும் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு விக்கெட் விழுந்த நிலையில் பவர் பிளேயில் 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, 55 ரன்கள் எடுத்திருந்தாலே அது ஒரு நல்ல அடித்தளமாக அமைந்திருக்கும்" என்று கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் திலக் வர்மாவின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 118.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். லீக் சுற்றில் சில நல்ல தொடக்கங்கள் கிடைத்தாலும், அதனைப் பெரிய ஸ்கோராக அவரால் மாற்ற முடியவில்லை.
ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அவரது முந்தைய புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. இந்த உலகக்கோப்பைக்கு முன்பு வரை அந்த அணிக்கு எதிராக 10 டி20 போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 496 ரன்களை 163.15 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்திருந்தார். முந்தைய சாதனைகள் அவருக்குச் சாதகமாக இருந்தாலும், அகமதாபாத் போட்டியில் அவரது ஆட்டம் அந்தப் புள்ளிவிவரங்களைப் பிரதிபலிக்கவில்லை.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால், அணியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மாவின் மோசமான ஃபார்ம் காரணமாக சஞ்சு சாம்சன் மீண்டும் ஆடும் லெவனுக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த முக்கியமான போட்டிகளில் வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய அணி நிர்வாகம் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.