மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் வெற்றியின் போது பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று கூறி அவரை யாராவது பாராட்டினீர்களா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக இந்திய அணி விளையாடுவதால் ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். நேற்று முதல் பலரும் கம்பீருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நிலையில் திடீரென்று தற்போது பலரும் கம்பீருக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய அணி சில தவறுகளை செய்தாலே கடுமையாக விமர்சிக்கும் கவாஸ்கர் தற்போது கம்பீருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கம்பீர் ஒரு பயிற்சியாளர் தான். பயிற்சியாளர் ஒரு அணியை தயார் செய்ய முடியும். ஆனால் வீரர்கள் தான் களத்திற்கு சென்று விளையாடி வெற்றி பெற வேண்டும்.
ஆனால் தற்போது இந்த தோல்விகளுக்கு பயிற்சியாளர்களை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற போது நீங்கள் என்ன செய்தீர்கள்? ஆசிய கோப்பையை இந்திய அணி வென்ற போது நீங்கள் என்ன செய்தீர்கள் ? அப்போதெல்லாம் கம்பீருக்கு நீங்கள் ஆதரவாக ஏதாவது சொன்னீர்களா?
அப்படி இருக்கும்போது இப்போது மட்டும் ஏன் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். இந்தியா வெற்றி பெற்ற போது கம்பீரின் பயிற்சியாளர் பதவி நீட்டிக்க வேண்டும் என்று யாராவது சொன்னீர்களா? அப்படி சொல்லாத போது அணி நன்றாக செயல்படவில்லை என்றால் அப்போது மட்டும் ஏன் பயிற்சியாளர் மீது விமர்சனம் வைக்கிறீர்கள்?
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என தனி பயிற்சியாளர் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இங்கிலாந்து அணியின் மூன்றுவித கிரிக்கெட்டிற்கும் மெக்குல்லம் தான் பயிற்சியாளராக இருக்கின்றார். பல நாடுகளும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிக்கும் ஒரே பயிற்சியாளரை தான் வைத்திருக்கிறார்கள். அணி தோற்கும் போது தான் நாம் கம்பீரை குறை சொல்கின்றோம். களத்திற்கு சென்று வீரர்கள் சரியாக விளையாடவில்லை எனில் நீங்கள் வீரர்களை தான் குறை சொல்ல வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.