மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருமுறை கூட இந்தியா வெற்றி பெற்றதில்லை.இதனால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் டெஸ்ட் இழந்ததன் மூலம் இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா தவற விட்டது. இனி வரும் மூன்றாம் தேதியில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடர் சமனில் முடியும்.

இல்லை என்றால் தென்னாப்பிரிக்க அணி எளிதாக இந்த தொடரை வென்று விடும். இந்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணங்களை கவாஸ்கர் பட்டியலிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் நாம் விளையாடுவதற்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் கண்டிப்பாக விளையாடிருக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு நேராக டெஸ்ட் போட்டியில் விளையாடினால் நிச்சயம் தோல்விதான்.
உங்களுக்கு கிடைக்கும் இந்திய ஏ அணியை நீங்கள் அனுப்பி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் இந்த அணியை அனுப்பி இருந்தால் அது வீரர்களுக்கு ஒரு பயிற்சியாக இருந்திருக்கும். நாங்கள்தான் இந்திய அணிக்குள்ளேயே வைத்து ஒரு நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தை நடத்தினோமே என்று நீங்கள் சொன்னால், அதை விட பெரிய காமெடி வேறு எதுவும் இல்லை.
உங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதலில் வேகமாக பந்து வீச தெரியுமா? உங்களுடைய பவுலர்களுக்கு பவுசரை வீச தெரியுமா? நமது பேட்ஸ்மேன்கள் காயம் அடைந்து விடுவார்கள் என்ற பயத்திலே பவுலர்கள் பந்து வீசுவார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற உடனேயே அங்குள்ள உள்ளூர் அணியை வைத்து நீங்கள் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் நீங்கள் விளையாடிருக்க வேண்டும். கேட்டால் வீரர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது என்று சொல்கிறீர்கள் இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்தே பணிச்சுமை என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.