மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறி வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதனால் பலரும் கம்பீர் மீது விமர்சனம் செய்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மட்டும் கம்பீருக்கு சாதகமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், கம்பீர் கடுமையாக உழைத்து வருகிறார்.

இது எதுவுமே கம்பீரின் தவறு கிடையாது. வீரர்கள் தான் கடுமையாக உழைத்து நன்றாக விளையாட வேண்டும். கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு நாம் வெள்ளை நிற கிரிக்கெட்ட தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை வென்றும் துபாயில் ஆசிய கோப்பையை வென்றோம்.
எனவே வீரர்கள் தான் களத்தில் இறங்கி ரன்கள் சேர்க்க வேண்டும். பயிற்சியாளர்கள் வழிகாட்ட தான் முடியும். அறிவுரை சொல்வார்கள். வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீரர்களுக்கு ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்கள் தான் பயிற்சியாளரை தொடர்பு கொண்டு அந்த சிக்கல் குறித்து பேசலாம்.
வீரர்கள் சிறப்பாக செயல்படும்போது, யாராவது பயிற்சியாளரை பாராட்டுகிறீர்களா? அப்படி இருக்கும் போது, அணியில் சரியாக செயல்படவில்லை என்றால் அப்போது மட்டும் ஏன் பயிற்சியாளரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று பேசி வருகிறீர்கள்.
நான் கம்பீர் உடன் நிறைய போட்டிகளில் விளையாடிருகின்றேன். அவர் இந்திய கிரிக்கெட் அணியை அவ்வளவு நேசிக்கிறார். கிரிக்கெட்டை அவர் விரும்புகிறார் அவருடன் இணைந்து நான் உலகக் கோப்பையை வென்று இருக்கின்றேன். அவர் நாட்டுக்காக ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். எனவே அணிக்கு வெற்றியை தேடி தருவது வீரர்களின் பொறுப்பு என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.