மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு சூர்யகுமார் எடுத்த தவறான முடிவே காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தென்னாப்பிரிக்கா அணி 16வது ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்து தடுமாறியது.
அப்போது சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். அக்சர் பட்டேல் ஒரு ஓவரில் இரண்டு ரன்கள் மட்டும் தான் விட்டுக் கொடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில் ரவி பிஸ்னாய்க்கு அடுத்தது அக்சர் பட்டேல் ஓவர் வீசி இருக்க வேண்டும்.

ஆனால் சூர்யகுமார் சுழற் பந்துவீச்சாளருக்கு ஓவர் வழங்காமல் வேக பந்துவீச்சை பயன்படுத்தினார். இது அறிவில்லாமல் எடுத்த முடிவாக நான் பார்க்கின்றேன். அக்சர் பட்டேல் ஒரு ஓவரில் இரண்டு ரன்கள் தான் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒரு ஓவர் வீசத்தான் அக்சர் பட்டேலை வைத்திருக்கிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோன்று தென்னாப்பிரிக்கா தொடரில் கே கே ஆர் அணியில் விளையாடிய ரமன்ந்திப் சிங் என்ற ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பேசி அவர் ரமண்தீப் சிங் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். கடந்த சில காலமாக அவர் பிரமாதமாக விளையாடி வருகிறார்.
நல்ல ஒரு ஆல் ரவுண்டராகவும் ஐபிஎல் தொடரில் விளங்கி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இறுதி கட்டத்தில் 62 பந்துகளை எதிர் கொண்டு 125 ரன்கள் அவர் விளாசி இருக்கிறார்.பந்து வீச்சிலும் சரியாக செயல்பட்டு இருக்கிறார். 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் இருக்கின்றது. நல்ல பீல்டிங்கும் செய்கின்றார். இந்திய ஏ அணியிலும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.
இப்படி இருக்கும் போது அவரை பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ் பயன்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா போல் ஒரு வீரரை நீங்கள் உருவாக்கினால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு தங்கம் போன்ற வாய்ப்பாக இருக்கும் என்று ராபின் உத்தபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி செண்ச்சூரியன் நகரில் வரும் புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது.