அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்க அணி 201 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இப்படி ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் ஆட விரும்புகிறோம். அதை தான் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் செய்தோம்.

இவ்வாறு விளையாடினால் இந்த முடிவு கிடைக்கும். இன்று ஆடிய அதிரடி தான் கடந்த சில போட்டிகளாக எங்களுக்கு மிஸ் ஆகி இருந்தது. எனினும் முக்கியமான நேரத்தில் எங்களால் அதை திருப்பி செய்ய முடிந்தது நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். பும்ராவின் ஓவரை மூன்று பகுதியாக பயன்படுத்த விரும்பினேன்.
பவர் பிளேவில் ஒன்று, நடு ஓவர்களில் ஒன்று, பின்னர் இறுதிக் கட்டத்தில் இரண்டு என்று வகுத்துக் கொண்டேன். இந்த தொடரில் நாங்கள் பல சவால்களை சந்தித்தோம். ஆனால் டி20 கிரிக்கெட் எப்போதுமே நாம் எவ்வாறு கம்பேக் கொடுக்கிறோம் என்பதை பொறுத்ததுதான். உண்மையிலே இந்தத் தொடர் சவாலாக இருந்தது.
எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து இருக்கின்றோம். இந்த தொடரில் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நடக்காமல் போய்விட்டது. சூர்யா என்ற பேட்ஸ்மேன் தான் காணவில்லை. அவர் மீண்டும் திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஒரு கேப்டனாக எனக்கு இந்த தொடர் மகிழ்ச்சியே தந்தது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் சூரிய குமார் தொடர்ந்து தடுமாறி வந்த நிலையில் தன் மீதான விமர்சனத்தை அவரே வெளிப்படையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.