தர்மசலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், விளையாட்டு என்பது வாழ்க்கையில் பல விஷயங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும். முக்கியமாக ஒரு போட்டியில் எப்படி கம்பேக் கொடுப்பது என்பதை நாம் கற்றுக் கொள்வோம்.

அதை தான் நாங்கள் இன்று செய்திருக்கின்றோம். எங்களுடைய அடிப்படை விஷயத்தை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். முதல் டி20 போட்டியில் என்ன செய்தோமோ, அதையே இங்கு செய்தோம். இதன் மூலம் முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியது. சந்திகார் போட்டியில் பல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
அதன் பின் பவுலர்களுடன் அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். பயிற்சியில் இங்கு வந்து கட்டாக் போட்டியில் என்ன செய்தோமோ அதையே பயிற்சியிலும் செய்தோம். அடிப்படை விஷயங்களை சரியாக செய்தாலே வெற்றி கிடைக்கும். இந்த போட்டியில் நாங்கள் வித்தியாசமாக எதையுமே செய்யவில்லை. இதனால் தான் எந்த ஒரு விஷயத்துக்கும் அடிப்படை என்பது மிகவும் முக்கியம்.
வலைப்பயிற்சியில் நான் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றேன். அங்கு நான் நன்றாக பேட்டிங் செய்கின்றேன். ஆனால் போட்டியில் ரன்கள் கிடைக்கவில்லை. அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கண்டிப்பாக எனக்கான போட்டியில் ரன்கள் வந்தே தீரும். அது நிச்சயம் வரும். நானும் ரன்களை தேடி செல்கின்றேன்.
நான் பார்மில் இல்லை என்று சொல்ல முடியாது.எனக்கு ரன்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று நாங்கள் இந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். அதன் பின்பு நாளை அமர்ந்து லக்னோ போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்போம் என்று சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி புதன்கிழமை நடைபெற உள்ளது.