சந்திகார்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், வெறும் 5 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை மீண்டும் கடுப்பை ஏற்றினார். சூரியகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் இந்திய அணிக்காக தடுமாறி வருவது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். இன்றைய ஆட்டத்தில் கூட சூரியகுமார் யாதவ் கடைசி வரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்தியா போராடியாவது தோல்வியை தழுவி இருக்கும்.

இல்லையென்றால் வெற்றியை அடைந்திருக்கும். ஆனால் இந்திய டி20 அணியின் பேட்டிங் முதுகெலும்பாக இருக்க வேண்டிய சூரியகுமார்,சுமையாக மாறிவிட்டார் என்பதே காலக்கொடுமை. 2025 ஆம் ஆண்டு சூரியகுமார் சர்வதேச டி20 போட்டிகளில் 17 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 20 ரன்கள் தான் அடித்து இருக்கிறார்.
இவருடைய பேட்டிங் சராசரி 14 என்ற அளவில் மிகவும் துயரமான நிலையில் இருக்கின்றது. சூரிய குமாரின் ஸ்டிரைக் ரேட் 126 என்று அளவில் உள்ளது. மூன்று டக் அவுட் ஆகியும் இருக்கின்றார். அதிகபட்சமாக நடப்பாண்டில் ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதேபோன்று 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு சூரியகுமார் யாதவ் மொத்தமாகவே இரண்டு அரை சதம்தான் அடித்திருக்கிறார். அதில் ஒன்று வங்கதேசத்துக்கு எதிராகவும், இன்னொன்று இலங்கைக்கு எதிராகவும் ஆகும்.
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் 33 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 731 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 24 என்று அளவில் இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் குறைந்த சராசரியை வைத்திருக்கும் இந்திய கேப்டன் என்ற பெருமையும் தற்போது சூரியகுமார் யாதவுக்கு இருக்கின்றது.
2009 ஆம் ஆண்டு தோனி பேட்டிங் சராசரி 23 என்ற அளவில் வைத்திருந்த நிலையில், தற்போது சூரியகுமார் யாதவும் 14.35 என்ற அளவில் தனது பேட்டிங் சராசரியை வைத்திருக்கின்றார். இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இதில் ஏதேனும் அவர் ரன்கள் அடித்தால் மட்டுமே இந்த மோசமான ரெக்கார்டில் இருந்து அவரால் தப்பிக்க முடியும்.