தர்மசாலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், கேப்டன் சூர்யகுமார் யாதவின் அணுகுமுறை மீது முன்னாள் வீரர் முகமது கைஃப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "மோசமான ஃபார்மில் இருக்கும்போது, சவாலை எதிர்கொள்ளாமல் ஓய்வறையில் ஒளிந்து கொள்ளக்கூடாது" என்று அவர் சூர்யகுமாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தர்மசாலாவில் நடந்த போட்டியில் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியா விரட்டியது. அப்போது 3-வது இடத்தில் இறங்க வேண்டிய சூர்யகுமார் யாதவ், தனக்கு முன்னால் திலக் வர்மாவை களமிறக்கினார். கடைசியாக 4-வது இடத்தில் வந்த அவர் 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதுகுறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கேள்வியே அவரது தற்போதைய ஃபார்ம் பற்றித்தான். இந்த ஆண்டு அவர் ரன் குவிக்கத் திணறி வருகிறார்.
நேற்றைய போட்டியில் அழுத்தம் இல்லாமல் ரன் குவிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. சிறிய இலக்கு என்பதால், அவர் 3-வது இடத்தில் இறங்கி, நிதானமாக ஆடி ஒரு 40 ரன்களாவது எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கலாம். அது அவருக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆனால் அவர் திலக் வர்மாவை அனுப்பிவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்தார்" என்று கூறினார்.
மேலும் பேசிய முகமது கைஃப், "திலக் வர்மா களத்திற்குச் சென்றபோது கேமரா சூர்யகுமாரையே காட்டியது. தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்போது, 'நாம் பேட்டிங் போகலாமா வேண்டாமா' என்ற தயக்கம் வருவது இயல்புதான். ஆனால் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
மீண்டு வர வேண்டுமென்றால், சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். டக்-அவுட்டில் ஒளிந்து கொண்டு ஃபார்மை மீட்க முடியாது. 4-வது இடத்தில் வந்த பிறகு ரன் அடிக்கப் பெரிய வாய்ப்பு இருக்காது. அதைத்தான் சூர்யகுமார் செய்தார்" என்று சுட்டிக்காட்டினார் முகமது கைஃப்.
2025-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த ஆண்டு இன்னும் இரு வாரங்களில் முடிய உள்ள நிலையில், சூர்யகுமார் இந்த ஆண்டில் எடுத்த மொத்த ரன்கள் 213 மட்டுமே. இதன் பேட்டிங் சராசரி 14.20 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 125.29 ஆக உள்ளது. முன்னணி அணிகளின் கேப்டன்களிலேயே, இந்த ஆண்டு மிக மோசமான சராசரியை வைத்திருப்பவர் சூர்யகுமார் யாதவ் தான்.
இருப்பினும், போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், தான் ஃபார்மில் இல்லை என்பதை மறுத்தார். "நான் வலைப்பயிற்சியில் மிகச்சிறப்பாகப் பேட்டிங் செய்கிறேன். என் பேட்டிங் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் ரன்கள் வரும்" என்று அவர் கூறியுள்ளார். உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பழைய ஃபார்முக்குத் திரும்ப வேண்டியது இந்திய அணிக்கு மிக அவசியம்.