அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மாவுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களைப் பார்த்து நான் கவலைப்படுகிறேன். ஏன் அவரது ஆட்டத்தை நினைத்து இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர் இன்னும் ரன் அடிக்கத் தொடங்கவில்லை என்பதால், இனி அவரை எதிர்கொள்ளப் போகும் எதிரணிகளை நினைத்துதான் நான் கவலைப்படுகிறேன். அவர் பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
இது ஒரு குழு விளையாட்டு. அணியின் தேவைக்கேற்ப அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அவர் சிறப்பாக ஆடினால் மகிழ்ச்சி. தவறினால் அதை ஈடுகட்ட நாங்கள் இருக்கிறோம். கடந்த ஆண்டு அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்காக ரன் குவித்தார். இந்த முறை அவருக்காக நாங்கள் அதைச் செய்வோம்" என்று சூர்யகுமார் தெரிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலும், அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து அணிக்குள் எந்த விவாதமும் இல்லை என்றும், அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அபிஷேக் சர்மா இந்த உலகக்கோப்பையில் இதுவரை வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார். உடல்நலக்குறைவால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அலி கானிடமும், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னர்களான சல்மான் அலி ஆகா மற்றும் ஆர்யன் தத் ஆகியோரிடமும் அவர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
வலது கை ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக அபிஷேக் சர்மா திணறுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார், "எந்த வகையான பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் போதுமான கிரிக்கெட் விளையாடியுள்ளோம். இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். பல கடினமான சூழல்களைக் கடந்து வந்துள்ளோம்" என்றார்.
2026 ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்குள்ளாகவே டி20 போட்டிகளில் 5 முறை டக் அவுட் ஆகி அபிஷேக் சர்மா தேவையற்ற சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் 21 போட்டிகளில் விளையாடி 859 ரன்களை 193.46 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் குவித்திருந்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக உலகக்கோப்பைக்குள் நுழைந்த அவரது இந்த முந்தைய சாதனைகளே அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் திட்டவட்டமாகப் பதிலளித்தார். "அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாகவா அல்லது திலக் வர்மாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை விளையாடச் சொல்கிறீர்களா? நாங்களும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதற்காகவே தயாராகி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டியிலும் அபிஷேக் சர்மாவே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது. லீக் சுற்றில் தோல்வியைச் சந்திக்காத இந்திய அணி, அதே வெற்றிப் பயணத்தைத் தொடர முனைப்பு காட்டி வருகிறது.