செஞ்சூரியன் : தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
ஒரு காலத்தில் டி20 கிரிக்கெட்டில் மன்னனாக விளங்கிய சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் இருக்கிறார். சூரியகுமார் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மீண்டும் தன்னுடைய முதல் இடத்திற்கு அவர் திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சூரிய குமார்,கடந்த சில இன்னிங்ஸ்களாக தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சூரியகுமார் யாதவும் தடுமாறியதால் இன்று பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் களமிறங்கினார். அபிஷேக் சர்மாவும் திலக் வர்மாவும் இரண்டாவது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 107 ரன்களை சேர்த்தனர்.
அபிஷேக் ஷர்மா 25 பந்துகளில் 50 ரன்களில் வெளியேற நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சூரியகுமார் களமிறங்கினார். 12 ஓவர்கள் எஞ்சி இருந்ததால் சூரியகுமார் யாதவ் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு செல்லப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நான்கு பந்துகளை எதிர்கொண்ட சூரிய குமார்யாதவ், ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன் மூலம் கடந்த 10 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் யாதவ் ஐந்து முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். சூரியகுமார் யாதவ் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் 75 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 21, 4,1 ஆகிய ரன்களை தான் தற்போது சூரியகுமார் யாதவ் அடித்திருக்கிறார். அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் சூரியகுமார் யாதவ் இப்படி ஏமாற்றி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த செய்திருக்கிறது. மீண்டும் சூர்யகுமார் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.