அகமதாபாத்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 231 ரன்கள் குவித்து சாதனை படைத்தாலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைக்குனிந்து பெவிலியன் திரும்பிய காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம், 2025ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்த ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் கூட அடிக்காத மோசமான சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெளுத்து வாங்கினர். ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் விதிவிலக்கு. இந்தப் போட்டியில் களமிறங்கியது முதலே தடுமாற்றத்துடன் காணப்பட்ட அவர், ஜார்ஜ் லிண்டே பந்துவீச்சில் ரன் எடுக்க திணறினார்.

பின்னர் கார்பின் போஷ் வீசிய வேகப்பந்து வீச்சை தூக்கி அடிக்க முயன்று, டைமிங் மிஸ் ஆகி மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெறும் 7 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி செல்லும்போது, அவரது உடல்மொழியில் நம்பிக்கை இழந்த சோர்வு வெளிப்படையாகத் தெரிந்தது.
டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ், கடந்த 14 மாதங்களாக ஃபார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். கடைசியாக அக்டோபர் 2024-ல் தான் அவர் அரைசதம் அடித்தார். ஆனால், 2025ம் ஆண்டில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த ஆண்டு மட்டும் அவர் மொத்த 19 டி20 இன்னிங்ஸ் ஆடி இருக்கிறார். அதில் மொத்த ரன்கள் 218 ரன்களை சேர்த்து இருக்கிறார். அதன் சராசரி வெறும் 13.62 மட்டுமே. அவரது டி20 கேரியர் சராசரி 35.29 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ட்ரைக் ரேட்இந்த ஆண்டு 123.16 ஆகும். அவரது வழக்கமாக ஸ்ட்ரைக் ரேட் 160+ ஆக உள்ளது.
நடப்பு தென்னாப்பிரிக்கத் தொடரிலும் 3 போட்டிகளில் ஆடிய அவர், மொத்தமாகவே 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி வெறும் 8.5 தான். ஒரு காலத்தில் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டி "மிஸ்டர் 360" என்று அழைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இப்போது டைமிங் கிடைக்காமல் தவிக்கிறார். உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், கேப்டனாக இருப்பதால் மட்டுமே அவர் அணியில் நீடிக்கிறாரா என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
சூர்யகுமார் யாதவ் சொதப்பினாலும், திலக் வர்மா 73 ரன் மற்றும் ஹர்திக் பாண்டியா 63 ரன் எடுத்து, அதிரடியாக ஆடியதால் இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றிப் பாதையில் சென்றாலும், கேப்டனின் பேட் மௌனமாக இருப்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ல் சூர்யகுமார் யாதவ் பழைய சூர்யகுமார் யாதவாக மாறுவாரா?