கட்டாக்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 5 டி20 போட்டி வரும் செவ்வாய்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் காயத்திலிருந்து திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்பட்டது, விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், இந்த தொடரிலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படும் என்று கூறினார். பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரை வீரர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் மாற்றி களம் இறங்கலாம். இதற்காக தயாராக இருங்கள் என்று நான் ஏற்கனவே அனைத்து வீரர்களிடமும் சொல்லிவிட்டேன்.
தொடக்க வீரர்களை தவிர மற்ற அனைத்துமே நிலையான தன்மையாக டி20 போட்டிகளில் இருக்காது. இதை மையப்படுத்தி தான் நாங்கள் டி20 அணியை தயாரித்து இருக்கின்றோம். நீங்கள் அணியில் நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதில் யாரை தேர்வு செய்வது என்பது ஒரு நல்ல தலைவலி தான். நாளைய போட்டியில் கூட, நீங்கள் திலக் வர்மாவை நம்பர் ஆறாவது இடத்தில் பார்க்கலாம்.
சிவம் துபேவை மூன்றாவது இடத்தில் பார்க்கலாம். இப்படித்தான் எங்கள் அணி செயல்படும். எங்கள் அணி பலமாகவும், நன்றாகவும் இருக்கின்றது. சஞ்சு சாம்சனை பொருத்தவரை அவர் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஆனால் அவர் அணிக்கு வருவதற்கு முன்பே இலங்கை தொடரில் கில் தொடக்க வீரராக விளையாடி இருந்தார்.
எனவே கில்லுக்கு தான் தொடக்க இடத்தை வழங்க வேண்டும். அதற்கு கில் தகுதியானவர். நாங்கள் சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி இருக்கின்றோம். அவரும் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட தயாராக இருக்கின்றார். இப்படி ஒரு வீரரை பார்க்கும்போது உண்மையிலே கேப்டனாகிய எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கின்றது. தொடக்க வீரராகவும் நடுவரிசையிலும் களமிறங்கக்கூடிய வீரர்கள் தான் எங்கள் அணியின் பலமாக நான் கருதுகிறேன் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.