டர்பன் : இந்தியா ,தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை டர்பன் நகரில் இரவு எட்டு முப்பது மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கேப்டன் சூரிய குமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது நான் அதிரடியாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன். ஆனால் அதே போல் களத்தில் என்னால் ஆக்ரோஷமான கேப்டனாக செயல்பட முடியாது. அதேசமயம் களத்தில் ஒவ்வொரு வீரர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கேப்டனாக நான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வீரர்களுக்கும் ஏற்ற வகையில் அணி சூழல் சரியாக இருக்கிறதா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். பலருக்கும் பல திறமைகள் இருக்கின்றது. அந்த திறமைகளை ஒவ்வொரு வீரர்களும் வெளிக் கொண்டு வர ஆசைப்படுவார்கள். அதற்கான சுதந்திரத்தை ஒரு கேப்டனாக நான் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வீரர்களும் பேசி அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக களத்திற்கு வெளியே நான் வீரர்களிடம் அதிக நேரம் செலவழித்து அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் கடினமான சூழலில் யாரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று புரிந்து கொள்ள முடியும்.
டி20 கிரிக்கெட் பொருத்தவரை தொடர்ந்து விளையாடி புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் போட்டி முடிந்து விடும் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், ருதுராஜ் பிரமாதமான வீரராக இருக்கின்றார்.
ருதுராஜ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். எனினும் அவருக்கு முன்பில் இருந்து பல வீரர்கள் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். எனவே வரிசையாக ஒவ்வொருவருக்காக அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு செயல்பாட்டை அணி நிர்வாகம் வகுத்திருக்கிறது.
அதனை ஒவ்வொருவரும் பின்பற்றுவது அவசியம். நிச்சயம் அவருக்கான காலம் வரும். இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் நேரம் வரும்போது நிச்சயம் கம்பேக் கொடுப்பேன். நான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எந்த தொடரையும் விடாமல் தொடர்ந்து விளையாடி வருகிறேன் என்றும் சூரிய குமார் கூறியுள்ளார்.