கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் மீண்டும் தடுமாறி இருக்கிறார். கட்டாக்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 17 ரன்களிலும், கில் 4 ரன்களிலும் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் சூரியகுமார், நடப்பாண்டில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். கடந்த 19 இன்னிங்ஸ்களில் மொத்தமாக அவர் 222 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 12 என்று அளவில் இருக்கின்றது. ஸ்ட்ரைக் ரேட் 114 என்ற அளவில் உள்ளது. இந்த 19 இன்னிங்ஸ்களாக சூரியகுமார் ஒரு முறை கூட 50 ரன்கள் தொடவில்லை.
இந்த 19 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் வெறும் இரண்டு முறை தான் 30 ரன்கள் மேல் அடித்திருக்கிறார். இந்த 19 இன்னிங்ஸ்களில் அவர் மூன்று முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். கடைசியாக விளையாடிய 19 இன்னிங்ஸ்களில் சூரிய குமார் 14 முறை 15 ரன்கள் கூட தாண்டாமல் ஆட்டமிழந்திருக்கிறார்.
இந்த 19 இன்னிங்ஸ்களில் சூரிய குமார் 5 ரன்களை கூட ஒன்பது முறை தாண்டாமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். கேப்டனாக அவர் நன்றாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் தொடர்ந்து அவர் தடுமாறி வருவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. டி20 உலக கோப்பை வர உள்ள நிலையில் சூரிய குமார் யாதவ் பேட்டிங்கில் தடுமாறுவது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சூரியகுமார் யாதவ் கொஞ்சம் பொறுப்புகளை உணர்ந்து சூழ்நிலை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும், அனைத்து பந்துகளையும் சுற்றத் தேவையில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூரியகுமார் குறைந்தபட்சம் 10 பந்துகளை யாவது பிடித்து விட்டு அதன் பின் அதிரடி காட்ட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.