பார்படாஸ்: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது மீண்டும் அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதல் பந்திலேயே குல்தீப் யாதவிற்கு ஸ்ட்ரைக் கொடுத்து சூர்யகுமார் யாதவ் மறுமுனைக்கு சென்றதை இன்று வரை மறக்காமல் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனை மறக்கடிகக் சூர்யகுமார் யாதவிற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் டக் அவுட்டாகியும் வெளியேறிய நிலையில்ம், இந்திய அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 4 அரைசதங்கள், ஒரு சதம் உட்பட 6 இன்னிங்ஸ்களில் 343 ரன்களை சூர்யகுமார் யாதவ் விளாசி உள்ளார். இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்த நிலையில் ரபாடா வீசிய 4வது ஓவரின் 3வது பந்தில் டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்தார். அந்த பந்து பேட்டில் சரியாக படாமல் உயரப் பறந்தது.
அந்த பந்தை கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர் பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
பவர் பிளே ஓவர்களில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் நிற்க வைக்கப்படுவார்கள். கிட்டத்தட்ட ஃபீல்டர்கள் அனைவரும் கண்முன் நிற்பார்கள். அப்படி இருந்த போதும், சரியாக ஃபீல்டரை பார்த்து சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே சூர்யகுமார் யாதவிற்கு லாங் ஆஃப், லாங் ஆன் திசையில் அட்டாக் செய்ய தெரியாது. இதனை கணித்தே தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்ட் செட் செய்து சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறது.