மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அணியில் எந்த ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரும் இல்லை என்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது.
இதற்கு காரணம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க முடியும். பந்துகளை வெளியில் இருந்து ஸ்டெம்பை நோக்கி உள்ளே கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் இடது கைப்பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக இருந்து வருவார்கள்.

ஆனால் ஜாகிர் கானுக்கு பிறகு இந்திய அணியில் குறிப்பிட தகுந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இடம் பெறவில்லை. இதனால் அந்தப் பொறுப்புக்கு தற்போது ஆர்ஸ்தீப் சிங் சேர்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு போதிய அளவில் வேகம் இல்லை. வெறும் அனுபவம் இல்லாமல் இருப்பதால் ஆர்ஸ்தீப் சிங் பெரிய தாக்கத்தை இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் நடராஜனுக்கு அந்த வாய்ப்பு 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் சிறப்பாக பந்துகளை வீசி டேவிட் வார்னரையே கவர்ந்தார். இதை அடுத்து இந்திய அணியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நடராஜன் விக்கெட்டுகளை எடுத்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ஆனால் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் அவருடைய இடம் பறிபோனது. இந்த நிலையில் 32 வயதான நடராஜன் முழு உடல் தகுதியைப் பெற்று தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் ஆறு மாதத்தில் டி20 உலக கோப்பை பெறுவதால் நடராஜனின் யாக்கர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் வல்லுநர்களும் கருதினர்.
தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய மூன்று போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் தன்னுடைய பழைய பார்முக்கு வந்திருக்கிறார். இதனால் நடராஜனை, t20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் நடராஜன் பெயர் சேர்க்கப்படவில்லை. இது தமிழக ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. இடது கை வேக பந்துவீச்சாளர் தேவைப்படும் நிலையில் நடராஜனை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.