கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவை விட இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை வீழ்த்திவதுதான் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் ஓபனாகப் பேசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் தொடங்குகிறது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்ரம், இந்திய அணியின் இளம் புயல் அபிஷேக் சர்மா குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார்.

பொதுவாக எதிரணி கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் அல்லது ஹர்திக் பாண்டியாவைத்தான் முக்கிய விக்கெட்டாகக் கருதுவார்கள். ஆனால் மார்க்ரம், அபிஷேக் சர்மாவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் அபிஷேக் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான பையன் மற்றும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்பதில் சந்தேகமே இல்லை, அவர் தான் எங்களுக்கு 'பெரிய விக்கெட்'.
புதிய பந்தை எடுக்கும் பந்துவீச்சாளருக்கு அவரைச் சீக்கிரம் வீழ்த்துவதுதான் பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரை விரைவாக அவுட் ஆக்குவது எங்களுக்கு மிக முக்கியம்" என்று மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
மார்க்ரம் இப்படிப் பயப்படுவதற்கு ஒரு நியாயமான காரணம் உள்ளது. தற்போதைய ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தான். 2025-ம் ஆண்டில் மட்டும் டி20 போட்டிகளில் 1499 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204.22 ஆக உள்ளது. அதாவது ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடுவதுதான் அவரது ஸ்டைல்.
இளம் வீரர்கள் பயமில்லாமல் ஆடுவது குறித்துப் பேசிய மார்க்ரம், "முதல் பந்திலிருந்தே அடித்து ஆட அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இதுதான் நவீன கிரிக்கெட். இது பார்ப்பதற்கு என்டர்டெயின்மென்ட்டாக இருக்கிறது. மேலும் டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு பெறவும் இது அவர்களுக்கு உதவுகிறது" என்றார்.
வரும் டிசம்பர் 16-ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்கள் தங்களை நிரூபிக்க இத்தொடரைப் பயன்படுத்துவார்களா என்று கேட்டதற்கு, "நிச்சயமாக, ஏலத்தில் இருக்கும் வீரர்கள் தங்களை நிரூபிக்க நினைப்பார்கள். ஆனால் அது மட்டுமே முக்கிய காரணம் அல்ல. அணி வெற்றி பெற்றால், வீரர்களுக்குத் தானாகவே மதிப்பு கூடும்" என்று மார்க்ரம் பதிலளித்தார்.