கட்டாக்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி மைதானத்தில் பெரும் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைச் சமாளிக்கப் போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, வரும் டிசம்பர் 9-ம் தேதி கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருப்பதைத் தவிர்க்க, காலை 6 மணிக்கு மேல்தான் வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கிரிக்கெட் வெறி பிடித்த ரசிகர்கள் நள்ளிரவு முதலே மைதானத்திற்கு வெளியே குவியத் தொடங்கினர். விடியற்காலைக்குள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்தது.
காலை 9 மணிக்கு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டபோது, பொறுமை இழந்த ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறினர். இதனால் அங்கே தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டம் கட்டுப்பாடின்றி சென்றதாலும், பேரிகார்டுகளைத் தள்ளிவிட்டு ரசிகர்கள் உள்ளே நுழைய முயன்றதாலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் லேசான தடியடி நடத்த வேண்டியதாயிற்று. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கட்டாக் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது மிகவும் அரிதாகிவிட்டது. கடைசியாக 2025 பிப்ரவரியில்தான் இங்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி நடந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கடைசியாக 2022-ல் தான் இங்கு டி20 போட்டி நடந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய போட்டி நடப்பதால், டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.
தற்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. டிக்கெட் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால், விராட் கோலி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்ததை அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டிக்கும், அவர் பங்கேற்காத டி20 தொடருக்கும் டிக்கெட் விற்பனை உச்சத்தை எட்டி உள்ளது.
டிசம்பர் 9: கட்டாக்
டிசம்பர் 11: நியூ சண்டிகர்
டிசம்பர் 14: தர்மசாலா
டிசம்பர் 17: லக்னோ
டிசம்பர் 19: அகமதாபாத்