சண்டிகர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 11) நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (முல்லன்பூர்) நடைபெறவுள்ளது. முதல் டி20யில் பெற்ற வெற்றியோடு, இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச ஆடவர் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைக்க இந்தியா காத்திருக்கிறது. இந்த புதிய மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும்? வானிலை ஒத்துழைக்குமா? என்பதை இங்கே விரிவாகக் காண்போம்.
சண்டிகரில் இன்று மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வீரர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவது "குளிர்" தான். பகல் நேரத்தில் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். ஆனால் போட்டி நடக்கும் இரவு நேரத்தில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது. கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு வீரர்களின் உடற்தகுதியைச் சோதிக்கும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஹோம் கிரவுண்டான இது, கடந்த சில ஐபிஎல் போட்டிகளை நடத்தியுள்ளது. இங்குள்ள பிட்ச் பொதுவாகப் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும். பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி பேட்டிற்கு வரும். இதனால் பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் ஷாட்களை ஆடலாம்.
இந்த மைதானத்தின் பக்கவாட்டு பவுண்டரிகள் (Square boundaries) சற்று சிறியதாக இருக்கும். இதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்தில், புதிய பந்துடன் வரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கைகொடுக்கும். அந்த முதல் சில ஓவர்களைச் சமாளித்துவிட்டால், அதன் பிறகு ரன் குவிக்கலாம்.
இந்த மைதானத்தில் 'பனிப்பொழிவு' (Dew) முக்கிய பங்கு வகிக்கும். கடுமையான குளிர் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பனி தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பந்து வழுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தைக் இறுக்கமாக பிடிக்க முடியாது.
எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்வதே பாதுகாப்பானது. சேஸிங் செய்வது இங்கு எளிதாக இருக்கும். ஒருவேளை முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், அந்த அணி குறைந்தது 180 முதல் 190 ரன்கள் குவித்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு இருக்கும். முதல் போட்டியில் வென்ற இந்தியா, இந்த சவாலான புதிய மைதானத்திலும் வெற்றிக்கொடியை நாட்டுமா என்று பார்ப்போம்.