மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், அதிரடி மன்னன் ரிங்கு சிங் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். "ரிங்கு சிங் பாவம், ஹர்திக் பாண்டியா வந்ததால் அவருக்கு இடம் இல்லாமல் போய்விட்டது" என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிக்கு தேவையான கடைசி ரன்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தவர் ரிங்கு சிங். ஆனால், சில மாதங்களிலேயே அவர் அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிங்கு சிங் நீக்கப்பட்டது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், "ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பிவிட்டார், அதனால் ரிங்கு சிங் வெளியேற்றப்பட்டுள்ளார். ரிங்கு சிங் மிகவும் துரதிர்ஷ்டவசமானவர். ஆனால் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பெற்று திரும்பும்போது இது நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்" என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிங்கு சிங் அணியில் இருந்தார். ஆனால் பிரிஸ்பேனில் நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால், அவருக்கு பேட்டிங் செய்யக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது நேரடியாக அணியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
இர்பான் பதான் கூறிய மற்றொரு கருத்து தான் ரிங்கு சிங் ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. "தென்னாப்பிரிக்கா தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அணிதான், 2026 டி20 உலகக்கோப்பைக்கான அணியின் 90 முதல் 95 சதவீதம் இருக்கும்," என்று பதான் கணித்துள்ளார்.
அப்படியென்றால், இந்த அணியில் இல்லாத ரிங்கு சிங், உலகக்கோப்பைத் திட்டத்திலும் இல்லை என்பது மறைமுகமாகத் தெரிகிறது.
ரிங்கு சிங்குக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்ஸ்மேன்களை விட ஆல்-ரவுண்டர்களை அதிகம் விரும்புவதே இதற்குக் காரணம்.
தொடர்ந்து பேசிய பதான், "இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு தான். அவரும், அவருடன் ஆடும் மற்றொரு ஃபினிஷரும் தான் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பார்கள். பும்ரா, ஹர்திக், சிவம் துபே மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் (அக்சர், குல்தீப், வருண்) என்ற கூட்டணியுடன் இந்தியா களமிறங்க வேண்டும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
எது எப்படியோ, திறமையான ஃபினிஷராக வலம் வந்த ரிங்கு சிங், ஆல்-ரவுண்டர்கள் மீதான மோகத்தால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.