ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி 10 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இந்த சூழலில் தேர்வு குழுவினர் தற்போது இந்த அணியை அறிவித்திருக்கின்றனர்.
சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அணியில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இடம் பெறாத கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சுப்மன் கில் இன்னும் பிசிசிஐ மருத்துவ குழுவால் கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதி பெறவில்லை.

இதனால் அனுமதி பெற்ற பின்பே அவர் அணிக்கு திரும்புவார் என்று பிசிசிஐ டிவிஸ்ட் வைத்திருக்கிறது. இதேபோன்று கடந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை எதிரான சூப்பர் ஃபோர் சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார். இதனை அடுத்து ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் அணியில் இடம்பெறாத அக்சர் பட்டேலுக்கு இந்த போட்டியில் இடம் கிடைத்திருக்கிறது.
இதேபோன்று விக்கெட் கீப்பர்களாக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவும் நடு வரிசையில் திலக் வர்மாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் ஆல்ரவுண்டராக சிவம் துபே அணியில் இணைந்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக இடம் கிடைத்திருக்கிறது. இந்த டி20 அணியில் ரிங்கு சிங் பெயர் இடம் பெறவில்லை. இந்திய அணி விவரம்: சூர்யகுமார் (கேப்டன்), கில் (துணைக் கேப்டன்), அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்ஸர், ஜிதேஷ் (விக்கெட் கீப்பர்), சஞ்சு (விக்கெட் கீப்பர்), பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப், குல்தீப், ஹர்ஷித், வாஷிங்டன்