மும்பை: இந்தியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செவ்வாய்கிழமை மோத உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா வென்று பதிலடி தந்துள்ளது. இரு அணிகளும் களத்தில் சமபலத்துடன் மோதுவதால், டி20 தொடர் பிரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர்களான டேல் ஸ்டெய்ன் மற்றும் இர்பான் பதான் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யமாக, இருவரும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியையே தேர்வு செய்துள்ளனர்.

34 வயதான வருண், தற்போது டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 டி20 போட்டிகளில் 11.50 சராசரியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் 23 சர்வதேச டி20 போட்டிகளில் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
தொடரை யார் வெல்வார் என்பதில், அவர்கள் 3-2 என தொடர் முடிவடையும் எனக் கணித்துள்ளனர். இதில், ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்றும், இர்ஃபான் பதான் இந்தியா கோப்பையை வெல்லும் என்றும் கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இரு அணிகளும் மோதியபோது, இந்தியா 3-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 தொரை வென்றது.
இந்த ஆண்டு 15 டி20 போட்டிகளில் 13 வென்ற இந்தியா வலுவான ஃபார்மில் உள்ளது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா கடந்த ஒன்பது டி20 ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்துள்ளது.
அதிக ரன்கள் குவிப்பவராக இளம் வீரர் அபிஷேக் சர்மாவை ஸ்டெய்ன், பதான் இருவரும் ஏகமனதாகத் தேர்வு செய்துள்ளனர். 17 டி20 போட்டிகளில் 47-க்கும் அதிகமான சராசரியுடன், 196.36 ஸ்ட்ரைக் ரேட்டில் அபிஷேக் அசத்தி வருகிறார். வருண் சக்கரவர்த்தியைப் போலவே, இவரும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
எனினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் விளையாடிய 4 போட்டிகளில் அவரது சராசரி 25-க்கும் கீழேதான் உள்ளது. ஆனாலும், ஸ்ட்ரைக் ரேட் 173-ஐக் கடந்துள்ளது. அதிக சிக்ஸர்களைப் பறக்கவிடும் வீரராக டேல் ஸ்டெய்ன் டேவிட் மில்லரைத் தேர்வு செய்ய, இர்ஃபான் பதான் சூர்யகுமார் யாதவை கணித்துள்ளார். இந்தியா, தென்னாப்பிரிக்கா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், செவ்வாய்க்கிழமை அன்று கட்டாக்கில் தொடங்குகிறது.