கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி நாளை செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் இந்திய அணியில் காயம் காரணமாக விலகி இருந்த கில் தற்போது திரும்பி இருக்கிறார். இதனால் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்பதால் சஞ்சு சாம்சனுக்கு அந்த இடம் கிடைக்காது. இதனை அடுத்து அவர் நடுவரிசையில் தான் விளையாட வேண்டும்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்மையில் நடைபெற்ற டி20 தொடரில் நடுவரிசையில் சஞ்சு சாம்சன் சோபிக்காத்தால், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், அவருக்கு பதில் ஜித்தேஷ் சர்மா களம் இறங்கினார். இந்த நிலையில் தற்போது இந்திய மண்ணில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் நடுவரிசையில் விக்கெட்டு பெற யார் களமிறங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு சென்று இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெற்று இருக்கும் சையது முஸ்டாக் டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். ஆந்திராவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 73 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக 46 ரன்களும், விதர்பா அணிக்கு எதிராக 1 ரன்னும், சத்தீஸ்கருக்கு எதிராக 43 ரன்களும், ரயில்வேஸ் அணிக்கு எதிராக 19 ரன்களும், ஒடிசா அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் சஞ்சி சாம்சன் அடித்திருக்கிறார்.
ஆனால் இந்த போட்டிகளில் அனைத்துமே அவர் தொடக்க வீரராக விளையாடியிருக்கிறார். இந்திய டி20 அணியில் நடுவரிசையில் தான் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கும் என்பதால் அவர் நடுவரிசையில் களம் இறங்கி, இந்த தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
இதனால் ஜித்தேஸ் சர்மா, சையது முஸ்டாக் அலி தொடரில் நடுவரிசையில் களம் இறங்கி இருக்கிறார். ஹரியானா அணிக்கு எதிராக 33 ரன்கள், குஜராத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 1 ரன், பஞ்சாப் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 6 ரன்கள், ஹிமாச்சல் அணிக்கு எதிராக 41 ரன்கள், புதுச்சேரி அணிக்கு எதிராக 5 ரன்கள், பெங்கால் அணிக்கு எதிராக 4 ரன்கள் அடித்துள்ளார்.
சஞ்சு சாம்சனை விட அவர் குறைவான ரன்கள் அடித்து இருந்தாலும் நடுவரிசையில் ஜித்தேஷ் களமிறங்கியுள்ளார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். செயல்பாடுகளை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் நன்றாக விளையாடியுள்ளார். இதனால் நடுவரிசையில் கம்பீர் யாருக்கு இடம் தருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.