
திருத்தி கொள்ள வாய்ப்பு
2 வீரர்கள் விலகியுள்ளதால், மாற்று 2 வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஆனால், குல்தீப் யாதவ்க்கு பதில் ஏற்கனவே அணியில் அக்சர் பட்டேல், ரிவி பிஸ்னாய், சாஹல் என மூன்று வீரர்கள் உள்ளனர். இதே போன்று வேகப் பந்துவீச்சாளர்களும் அதிகளவில் உள்ளனர். இதனால் மாற்று வீரர்களாக 2 பேட்ஸ்மேன்களை அணிக்கு அழைப்பது தான் சரியானதாக இருக்கும். அப்படி பார்த்தால் தேர்வுக்குழுவினர் தாங்கள் செய்த தவறை திருத்தி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் சஞ்சு சாம்சன் போன்ற வீரர் அணிக்கு தேவை என்று கேப்டன் ரோகித் கூறி இருந்தார். அதற்கு ஏற்றார் போல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க தொடரில் அவர் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடி 458 ரன்கள் சஞ்சு சாம்சன் விளாசி இருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும்.

ராகுல் திரிபாதி
31 வயதான ராகுல் திரிபாதி, கடந்த பல சீசன்களாக ஐபிஎல் தொடரில் ரன் குவித்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சீசனிலும் கூட ஐதராபாத் அணிக்கு விளையாடிய திரிபாதி பல மிரட்டல் இன்னிங்சை ஆடினார். 14 போட்டியில் 413 ரன்கள் குவித்த திரிபாதிக்கு, இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லை என்று ரசிகர்கள் ஏற்கனவே கூறிய நிலையில், அதை திருத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணியில் எங்கு இடம்?
இவ்விருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டால், தொடக்க வீரர்களாக ருத்துராஜ் அல்லது இஷான் கிஷன் சொதப்பினால் அவர்களுக்கு மாற்றாக ராகுல் திரிபாதியை பயன்படுத்தலாம். இதே போன்ற நடுவரிசையில், மூன்றாவது அல்லது நான்காவது வீரராக சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ராகுல் இல்லை என்றாலும், அதனை சமாளிக்கும் அளவுக்கு இந்திய அணியின் பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications