பார்படாஸ் : டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மோத இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும்,ரசிகர்கள் மத்தியில் ஒரு குறை இருக்கிறது.
நடப்பு தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி மொத்தமாகவே 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் சராசரி வெறும் 10 ரன்கள் தான் அரையிறுதியில் கூட விராட் கோலி ஒன்பது பந்துகளில் ஒன்பது ரன்கள் தான் எடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா, இறுதிப் போட்டியில் பெரிய ரன்கள் குவிப்பதற்காக விராட் கோலி தன்னுடைய ரன்களை சேமித்து வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன் என்று கூறினார். இதனால் விராட் கோலியின் ஸ்பெஷல், ஃபைனலில் கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர், விராட் கோலி எத்தனை ரன்கள் அடிப்பார் என்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். விராட் கோலி கண்டிப்பாக பைனலில் 100 ரன்கள் குவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றால் அது ஓப்பனிங் மற்றும் நடு வரிசை தான். தொடக்கத்தில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி வருவதால் அந்த குறை பெரிய அளவில் தெரியவில்லை. இந்த சூழலில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் முதல் விக்கெட்டுக்கு பெரிய ஸ்கோரை குவித்தால் நிச்சயம் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமாகும்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 741 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதம் அடங்கும். ஸ்ட்ரைக் ரைட் 154 என்று அளவில் அபாயகரமாக இருந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் அசுரத்தனமான தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாட விராட் கோலி என்ற அரசன் தன்னுடைய ஸ்பெஷல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.