மும்பை: டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான சக்லைன் முஷ்டாக் மற்றும் சோயப் அக்தர் ஆகியோர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிக மோசமான தோல்வியாக இதுவாகும்.
முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியின் தோல்வியைக் கடுமையாக விமர்சித்தார். "தென்னாப்பிரிக்கா இந்தியர்களை தரதரவென தரையில் இழுத்துச் சென்று, அடித்து நொறுக்கி, அவமானப்படுத்திவிட்டது. சமீபகாலமாக இந்தியா அடைந்திருக்கும் அனைத்தையும் தென்னாப்பிரிக்கர்கள் ஓரிரு படிகள் கீழே இறக்கிவிட்டனர்" என்று அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் திட்டமிடலை முஷ்டாக் பாராட்டினார். "அவர்களின் அனைத்து திட்டங்களும் இன்று கைகூடின. பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் களத்தடுப்பு என மூன்று பிரிவுகளிலும் தென்னாப்பிரிக்காவின் திட்டமிடல் சிறப்பாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், அ "ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களால் அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. அழுத்தம் ஏற்பட்டபோது இந்திய பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டது. இந்தியா ஒரு வலுவான அணி என்று நாங்கள் எப்போதும் சொல்கிறோம், ஆனால் மிடில் ஆர்டரில் திறமையைக் காட்ட வேண்டிய நாள் இது" என்று அக்தர் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் அதிரடி ஆட்டம் பலனளிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா 20வது ஓவருக்கு மட்டுமல்ல, மிடில் ஓவர்களுக்குக் கூட சரியான தேர்வு இல்லை" என்று கூறினார். அணித் தேர்வில் உள்ள தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விமர்சனங்கள் மூலம், இந்திய அணி தங்களின் வியூகங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை அக்தர் வலியுறுத்தினார்.