IND vs SA: இந்திய அணியில் இந்த ஒரு விசயம் மட்டும் கவலையாக இருக்கிறது.. முகமது கையிஃப் கருத்து
அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை, சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மீது தமக்கு ஒரு விசயத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் குறித்து நம்பிக்கை தெரிவித்த முகமது கைப், பந்துவீச்சு குறித்து தனது கவலையை கூறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் 12 ஓவர்கள் முக்கியம் என்றாலும், மீதமுள்ள ஓவர்கள்தான் சிக்கலானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஹர்திக் பாண்டியாவின் நான்கு ஓவர்களும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் தூபே போன்றோரின் ஓவர்களும் கவலைக்குரியவை என்று கைப் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங்கை பந்துவீச அழைத்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து பேசிய முகமது கைப், "எங்கள் பந்துவீச்சு குறித்து எனக்கு சற்றுக் கவலையாக இருக்கிறது. பும்ரா, அர்ஷ்தீப், வருண் ஆகியோரின் 12 ஓவர்களை எடுத்து விடுங்கள். இந்த பிட்ச்சில் ஹர்திக்கின் நான்கு ஓவர்கள் குறித்த கவலை எனக்கு உள்ளது. அடுத்த நான்கு ஓவர்கள் குறித்தும் நான் கவலைப்படுகிறேன். ஐந்தாவது மற்றும் ஆறாவது பவுலர்கள்தான் எனக்கு கவலை."
"சூரியகுமார் அறிந்திருப்பதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக ரிங்குவும் திலக்கும் பந்துவீசினர். அக்சர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சரியாகப் பொருந்தக்கூடியவர், ஆனால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அல்ல. தென்னாப்பிரிக்காவில் பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சுந்தர் அகமதாபாத்தில் விளையாட வாய்ப்புள்ளது " என்று குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பும்ரா மற்றும் வருண் போன்ற பந்துவீச்சாளர்களை அதிகம் ரிஸ்க் எடுக்காமல் சமாளிக்க முயற்சிப்பார்கள் என்றும், பின்னர் சுந்தர், தூபே மற்றும் ஹர்திக் போன்ற மற்ற பந்துவீச்சாளர்களை குறி வைப்பார்கள் என்றும் கைப் கூறினார்.
“ரிக்லெட்டன், டி காக், மார்க்ரம், மில்லர், ஸ்டப்ஸ் மற்றும் பிரெவிஸ் போன்ற வீரர்கள் அகமதாபாத்தில் விளையாடி உள்ளனர். பேட்டிங்கைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர். எனவே இது அவர்களின் பேட்டிங்கிற்கும் எங்கள் பந்துவீச்சிற்கும் இடையிலான ஒரு போராக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
ஏய்டன் மார்க்ரம் (178), ரியான் ரிக்லெட்டன் (145), மற்றும் குயின்டன் டி காக் (118) ஆகியோர் கணிசமான ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்தியாவுக்காக, வருண் சக்கரவர்த்தி இதுவரை அதிகபட்சமாக ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த முக்கியமான மோதலில் வருணுடன் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் போன்ற பந்துவீச்சாளர்களும் முக்கிய பங்காற்றுவார்கள்.


Click it and Unblock the Notifications