செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி, இந்திய அணி வீரருக்கு எதிராக செய்த செயலுக்காக இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இது எல்லை மீறி அவரது மனைவியின் சமூக வலைதள பக்கங்களையும் குறி வைத்து மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். அந்த சம்பவம் குறித்து தற்போது பொதுவெளியில் பகிர்ந்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தப்ரைஸ் ஷம்சி.
சில வாரங்கள் முன்பு இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 தொடர் நடைபெற்றது. அப்போது இரண்டாவது போட்டியில் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை தப்ரைஸ் ஷம்சி வீழ்த்தினார். அதன் பின் ஷூவை கையில் எடுத்து, அதை தொலைபேசி போல காதில் வைத்து விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடினார்.

ஷம்சி செய்த அந்த செயல் சூர்யகுமாரை ஷம்சி அவமரியாதை செய்வது போல இருப்பதாக இந்திய ரசிகர்கள் சிலர் கருதினர். ஆனால், ஷம்சி இதற்கு முன்பும் இதே போன்ற கொண்டாட்டத்தை பல முறை செய்துள்ளார். அதற்கு அவர் முன்பு விளக்கமும் அளித்து இருக்கிறார். களத்தில் இருக்கும் அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் இது அவுட் தானா என வாக்கிடாக்கியில் கேட்பதை தான் இப்படி ஷூவை வைத்து செய்வதாக ஷம்சி விளக்கம் அளித்து இருந்தார்.
ஆனால், ஷூவை கையில் எடுத்து காட்டுவது என்பது இந்திய கலாச்சாரத்தில் அவமரியாதை செய்யும் செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஷம்சி அந்த நோக்கத்தில் அப்படி செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளாத சில ரசிகர்கள், அந்தப் போட்டிக்கு பின் ஷம்சியின் சமூக ஊடக பக்கங்களில் அவரை கடுமையாக திட்டி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அத்துடன் நிற்காமல் அவரது மனைவியையும் திட்டி இருக்கிறார்கள்.
அது பற்றி வருத்தத்துடன் பேசிய ஷம்சி, நான் செய்ததை சிலர் அவமரியாதை என்பதாக எடுத்துக் கொண்டார்கள். என் மனைவியையும் திட்டினார்கள். அதை நான் விரும்பவில்லை. சில சமயம் வீரர்களை கேலி, கிண்டல் செய்யலாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் குடும்பத்தினரை பற்றியும் மோசமாக பேசுவதை ஏற்க முடியாது. மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும். மிருகம் போல நடந்து கொள்ளக் கூடாது என்றார்.