பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதில் இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பார்படாஸ் மைதானத்தை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் விளையாடப்பட்டுள்ள போட்டிகளில் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் பார்படாஸ் மைதானத்தில் முடிவு எட்டப்பட்டுள்ள 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 3 முறையும், சேஸிங் செய்த அணி 3 முறையும் வென்றுள்ளன.

சராசரி ஸ்கோரே 163 ரன்களாக இருப்பதால், இந்திய அணியால் எளிதாக 180 ரன்களை வரை சேர்க்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. பவுண்டரி எல்லையும் குறைவாகவே இருப்பதால், நிச்சயம் அதிகளவிலான சிக்ஸ், பவுண்டரிகள் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்றுள்ளதால், இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் 2010ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை முதல் 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை வரை டாஸ் வென்ற அணிகளே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதேபோல் இதுவரை நடந்த 8 டி20 உலகக்கோப்பை தொடரில் 7 முறை டாஸ் வென்ற அணிகளே கைப்பற்றியுள்ளன. இம்முறை இந்திய அணி டாஸ் வென்றுள்ளதால், ரசிகர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இந்த போட்டியில் விளையாடுவதன் மூலமாக இருவரும் 8வது ஐசிசி இறுதிப்போட்டியில் விளையாடிய பெருமையை பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் 8 ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியில் விளையாடிய முதல் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தான்.
இதனால் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் இணைந்து 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை மட்டுமே வென்றுள்ளனர். இதனால் இந்த டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.