கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆன தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் பல சாதனைகளை படைத்திருக்கிறது.
குறிப்பாக டெம்பா பவுமா இதுவரை 11 போட்டிகளில் அணியை வழிநடத்தி பத்து போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் அடைந்திருக்கின்றார். இதன் மூலம் தோல்வியே பெறாமல் அதிக போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற பெருமையை பவுமா சமன் செய்திருக்கிறார். இதற்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி, முதல் தோல்வியை பெறுவதற்கு முன்பு 10 வெற்றிகளை பெற்றிருந்தார்.

தற்போது இதனை பவுமா சமன் செய்துள்ளார். இந்த நிலையில் கவுதாத்தியின் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தோல்வியை பெறுவதற்கு முன் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற மகத்தான சாதனையை பவுமா படைப்பார்.
அது மட்டும் இல்லாமல் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றுவதன் மூலம் இந்திய மண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்ற கேப்டன் என்று பெருமையும் பவுமாவுக்கு கிடைக்கும். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்த போது 2000 ஆண்டு தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஹான்சி க்ரோஞ் தலைமையில் தொடரை வென்றது.
அதில் முதல் டெஸ்டில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 72 வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா வென்றது.இதேபோன்று பவுமா இன்னும் 31 ரன்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். தற்போது வரை பவுமா 969 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 57 ஆகும். மூன்று சதம், 6 அரை சதம் அடங்கும். இந்த சாதனையை அவர் கடந்தால் ஆயிரம் ரன்களை அடித்த ஒன்பதாவது தென்னாப்பிரிக்க கேப்டன் என்று பெருமையை அவர் பெறுவார்.