கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்து இருக்கிறது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாபிரிக்க அணி தொடரை வென்று சாதித்து இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற தெம்பா பவுமா, தற்போது இந்தியாவிலும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் பவுமா, இன்னொரு ஒரு கோப்பை கிடைத்திருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகின்றேன்.

அதுவும் தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த இரண்டு மாதங்கள் கொஞ்சம் சவாலாகவே இருந்தது. காயம் காரணமாக நான் விளையாடவில்லை. அதன் பின் மீண்டும் கம்பேக் கொடுத்தது நிச்சயம் நல்ல விஷயம்தான். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெறுவது என்பது எப்போதும் நடக்காத ஒன்று.
ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு கடினமாக எதிரணிக்கு இருக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். இது உண்மையிலேயே மிகச்சிறந்த சாதனை தான். எங்கள் அணி மீது சில கேள்விகள் வைக்கப்பட்டது. அதற்கு நாங்கள் பதில் அளித்து இருக்கின்றோம் என நினைக்கின்றேன். எங்களுடைய மனதளவில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்ன பணி என்று நன்றாக தெரியும். இந்த தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராக இருந்தோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும், அவர்களுக்கான நாளில் சாதிக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும்.
பெஞ்சில் இருந்த முத்துசாமி கூட அவருடைய நாளில் சாதிப்பார். ஒரு அணியாக நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கின்றோம். இன்னும் பல வெற்றிகளை நாங்கள் பெறுவோம் என்று நம்புகிறோம். திட்டத்தில் தெளிவு மற்றும் வீரர்களுக்கு இடையே சரியான உரையாடல் இருப்பது தான் ஒரு அணிக்கு முக்கியம் என்று நினைக்கின்றேன்.
சில பௌலர்கள் தொடர்ந்து நன்றாக பந்து வீசி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து பந்தை வாங்கவே சவாலாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து பந்து வீச ஆசைப்படுகிறார்கள். நாங்கள் இந்த போட்டியில் பெரிய சதம் எதுவும் அடிக்கவில்லை. எனினும் 60, 70 ரன்கள் அடித்தாலே அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
2015 ஆம் ஆண்டு சைமன் ஹார்மருக்கு இங்கு விளையாடிய அனுபவம் இருக்கிறது. நல்ல அனுபவம் வாய்ந்த வீரராக அவர் இருக்கின்றார். கேசவ் மஹாராஜாவும் நல்ல முறையில் பந்து வீசி வருகிறார். இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை சைமன் தான் இந்த தொடரின் நாயகன் என்று கூறியுள்ளார்.