கொல்கத்தா: சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளத்தைத் தயார் செய்து, சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. "சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தை அணி நிர்வாகம் கேட்டது உண்மைதான்" என்று கம்பீர் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த வியூகமே இந்திய அணிக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
கம்பீரின் பதவிக் காலத்தில் இந்திய அணி சந்திக்கும் நான்காவது டெஸ்ட் தோல்வி இதுவாகும். நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சொந்த மண் தொடர் தோல்வியும் இதில் அடங்கும். இந்தச் சூழலில், டெஸ்ட் போட்டிகளில் கம்பீரின் எதிர்காலம் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கௌதம் கம்பீரின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தியாவின் பலமான பேட்டிங்கில் இருந்து தற்போதைய அணி விலகிச் செல்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
'வில்லோ டாக் கிரிக்கெட் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பேசிய பிராட் ஹேடின், "கம்பீரின் தலைமையில் இதுபோன்று நடப்பது இது இரண்டாவது முறையாகும். சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களை நம்பி அவர்கள் இருப்பதில்லை. மாறாக, ரன்களைக் குவித்து ஸ்கோர்போர்டில் அழுத்தம் கொடுக்கும்போதுதான் அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஆனால், இந்த ஸ்பின் வியூகத்தின் மூலம், தங்களின் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையே ஆட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "அவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பெரிய ஸ்கோரை அடித்து, பின்னர் ஃபீல்டிங் மூலம் எதிரணிக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதில்தான் இந்தியாவின் உண்மையான பலம் உள்ளது. அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் யாரை விடவும் சிறந்தவர்கள், ஆனால் இதுபோன்ற ஆடுகளங்களில் அவர்களின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை அவ்வளவு சிறப்பாக விளையாடுவதில்லை" என்று ஹேடின் கூறினார்.
இந்திய அணியின் தற்போதைய அணுகுமுறையை, விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்துடன் ஒப்பிட்டு ஹேடின் தனது விமர்சனத்தை வைத்தார். "விராட் கோலி கேப்டனாகப் பொறுப்பேற்றபோது, அவர்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்து ஸ்கோர்போர்டில் அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது, இவர்கள் அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்புகிறார்கள்."
"இது சாதாரண சுழற்பந்து வீச்சாளர்களைக் கூட ஆட்டத்திற்குள் கொண்டு வந்துவிடும். பந்தை வீசத் தெரிந்த எவரும் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்ற நிலையை இது உருவாக்குகிறது. 'நாங்கள் விளையாடும் ஆடுகளத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று கம்பீர் வெளிப்படையாகக் கூறியதைக் கேட்டேன். இதே அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கும் காரணமாக அமைந்தது" என்று ஹேடின் எச்சரித்தார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணி ஒரு மாற்றுக் கட்டத்தில் பயணிப்பது தெளிவாகத் தெரிகிறது. பேட்டிங் வரிசையில் உள்ள நிச்சயமற்ற தன்மை, சமீபத்திய போட்டிகளில் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. 3-ம் வரிசையில் ஓரளவிற்கு நிலைத்து வந்த சாய் சுதர்சனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் களமிறக்கியது, அணித் தேர்வில் உள்ள குழப்பங்களை மேலும் அதிகரித்துள்ளது.