கவுகாத்தி: 549 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்தத் தொடங்கிய இந்திய அணிக்கு, நான்காம் நாள் ஆட்ட முடிவிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. போட்டியை 'டிரா' செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கிய துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல், 10 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து இந்திய அணியின் தோல்வியை பாதி செய்துவிட்டனர்.
கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை வெல்வது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் களத்தில் நின்று போட்டியை டிரா செய்வதே இந்திய அணியின் ஒரே இலக்காக இருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில், இந்திய துவக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் நாள் முழுவதும் ஆடி முடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவே ஐந்தாம் நாள் ஆட்டத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, அனுபவ வீரரான கே.எல். ராகுலும் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். வெறும் 9.2 ஓவர்களில், 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுமோசமான தொடக்கத்தைப் பெற்றது.
அணியைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் இருந்த துவக்க வீரர்கள் இருவரும், அதைத் தட்டிக்கழித்துச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது, இந்திய அணியின் தோல்விப் பாதைக்கு முதல் அடியை எடுத்து வைத்துவிட்டது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 522 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. வெற்றி பெறுவது என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 5-ம் நாள் ஆட்டத்தில் ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தது ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1948-ல் பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணிதான் அந்தச் சாதனையைச் செய்தது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
போட்டியை டிரா செய்ய வேண்டுமென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் 5-ம் நாள் முழுவதும், அதாவது 90 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவர்களில் சுருண்ட இந்திய அணி, நான்காவது இன்னிங்ஸில், சிதைந்து போன 5-ம் நாள் பிட்ச்சில் 90 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் அது இமாலய சாதனையாக இருக்கும்.
21-ம் நூற்றாண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய அணி நான்காவது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்துள்ளது. அது 2021-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிகழ்ந்தது.
தற்போது சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் உள்ளனர். இந்தியா 27 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 5-ம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே போட்டியின் முடிவு அமையும்.
துவக்க வீரர்கள் கொடுத்த இந்த மோசமான தொடக்கத்தால், இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்து 'ஒயிட்வாஷ்' ஆகும் அவமானத்தின் விளிம்பில் நிற்கிறது. ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியா இந்த படுதோல்வியில் இருந்து தப்பிக்க முடியும்.