கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற வரலாறு காணாத வெற்றி இலக்கை தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு நம்பமுடியாத இலக்காகப் பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி போட்டியை வெல்வது ஒருபுறம் இருக்க, போட்டியை டிரா செய்வதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கு முன் இந்திய அணி எத்தனை முறை பெரிய சேஸிங்கை எதிர்கொண்டுள்ளது? அதன் முடிவுகள் என்ன? இந்தப் போட்டியை டிரா செய்வது சாத்தியமா? என்று பார்க்கலாம்.
முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஃபாலோ-ஆன் கொடுக்காமல் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 4-ம் நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய அந்த அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமாக விளையாடி 94 ரன்கள் குவித்தார். டோனி டி சோர்ஸி 49 ரன்களும், வியான் முல்டர் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 549 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. புள்ளிவிவரங்களும் இந்திய அணிக்கு எதிராகவே உள்ளன. ஆசியக் கண்டத்திலேயே இதுவரை எந்த அணியும் நான்காவது இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்றதில்லை. 2021-ல் வங்கதேசத்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 395 ரன்கள் சேஸ் செய்ததுதான் ஆசிய மண்ணில் சாதனையாக உள்ளது.
இந்திய மண்ணில் அதிகபட்சமாக 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 387 ரன்கள் சேஸ் செய்ததுதான் சாதனையாக உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது 549 என்பது மிகப்பெரிய இலக்கு.
சொந்த மண்ணில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் இலக்கைப் பெறுவது இது இரண்டாவது முறை மட்டுமே. இதற்கு முன் 2004-ல் நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 543 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, 342 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ரன்கள் அடிப்படையில் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாகும். அதை விட பெரிய இலக்காக தற்போது 549 ரன்கள் இலக்கை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.
வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் அடுத்த இலக்கு போட்டியை டிரா செய்வதாகத்தான் இருக்கும். அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் (100 ஓவர்களுக்கு மேல்) களத்தில் நிற்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் வெறும் 83.5 ஓவர்களில் சுருண்ட இந்திய அணிக்கு, இதுவும் ஒரு அக்னிப் பரீட்சைதான்.
21-ம் நூற்றாண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய அணி நான்காவது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்துள்ளது. 2021-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 131 ஓவர்கள் நின்று டிரா செய்தது இந்திய அணி. அந்தப் போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் காட்டிய வீரத்தை, தற்போதைய இந்திய வீரர்கள் காட்டுவார்களா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களின் திறமைக்கும், மன உறுதிக்கும் இது ஒரு மிகப்பெரிய சோதனை. ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலில் இருந்து இந்திய அணி மீள முடியும்.