சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட போது, இந்திய அணியின் கேஎல் ராகுல் கொடுத்த ரியாக்சன் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து களத்தில் உள்ளது. 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, டெய்லண்டர்களுடன் அபாரமான பேட்டிங் செய்து கேஎல் ராகுல் அசத்தலாக அரைசதம் விளாசினார்.

2021ஆம் ஆண்டு சென்சுரியன் மைதானத்தில் விளையாடிய போது கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தினார். தற்போது இந்திய அணி சிக்கலில் இருந்த போது, அசால்ட்டாக மீட்டெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். எப்படி காயத்திற்கு பின் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி கம்பேக் கொடுத்தாரோ, அதேபோல் டெஸ்ட் போட்டியிலும் தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார்.
விராட் கோலியால் அதிகம் ஆதரிக்கப்பட்ட வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவர். இதனால் கேஎல் ராகுலை ரசிகர்கள் குட்டி கோலி என்று கிண்டல் செய்து வருவார்கள். ஆனால் கேஎல் ராகுல் எப்போதும் விராட் கோலிக்கு எதிரான மனநிலையில் இருந்து விளையாடுபவர். களத்தில் எந்தவித ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல், ஆட்டத்தில் ஆக்ரோஷத்துடன் விளையாடும் தன்மையை கொண்டவர்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் சச்சின் டெண்டுல்கரை போல் எந்த வம்புக்கும் செல்லாதவர். நேற்றைய ஆட்டம் கேஎல் ராகுலின் குணத்திற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் மார்கோ யான்சன் வீசிய முதல் ஸ்பெல் 3 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. அவரால் சரியான லைன் மற்றும் லெந்தை பிடித்து பந்துவீச முடியவில்லை.
இதனால் உடனடியாக பர்கர் அட்டாக்கில் வந்து சில விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் யான்சன் அட்டாக்கில் வந்தாலும் எந்த விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. அவரது பந்துவீச்சில் அதிக ரன்களை இந்திய வீரர்கள் விளாசினர். இதனிடையே யான்சன் வீசிய ஒரு பந்தில் கேஎல் ராகுல் அபாரமாக சிக்சர் ஒன்றை விளாசினார். இதனால் யான்சன் கோபமடைந்து நடந்து சென்றார்.
இதன்பின் யான்சன் வீசிய அடுத்த பந்தில் கேஎல் ராகுல் ரன்கள் எதுவும் சேர்க்கவில்லை. அப்போது கேஎல் ராகுலை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில், ஏதோ வார்த்தைகளை விட்டார் யான்சன். ஆனால் கேஎல் ராகுல் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார். இதையடுத்து மேலும் எந்த வார்த்தைகளையும் விடாமல் யான்சன் பின் நகர்ந்தார். இது இந்திய ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.