மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து படுதோல்வியை சந்தித்த பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன சப்பைக்கட்டு காரணத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலி முற்றிலுமாக மறுத்துள்ளார். "இந்த காரணத்தை மட்டும் சொல்லி தப்பிக்க முடியாது" என அவர் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா என அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் 'ஒயிட்வாஷ்' ஆகி இந்திய அணி வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக கவுகாத்தி டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி தற்போது ஒரு "மாறுதலுக்கான காலகட்டத்தில்" இருப்பதாகவும், அணியை புதிதாகக் கட்டமைத்து வருவதாகவும் கவுதம் கம்பீர் தொடர்ந்து கூறி வருகிறார். தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் என்பது அவரது வாதம்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, கம்பீரின் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளார். "இது கடினமான சூழல் தான், ஏனென்றால் இந்தியா சொந்த மண்ணில் எப்போதும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும். ஆனால் இதை ஒரு 'ரீபில்ட்' அல்லது அணியைக் கட்டமைக்கும் நேரம் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது."
"ஏனென்றால் தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் டாப் கிளாஸ் வீரர்கள். அவர்கள் ஒன்றும் அனுபவம் இல்லாதவர்கள் அல்ல.
நியூசிலாந்து தொடரிலும் தோற்றீர்கள், இப்போது தென்னாப்பிரிக்காவிடமும் தோற்றுள்ளீர்கள். இந்தியா தனது சொந்த மண்ணில் ஆடுவதை எப்போதும் கௌரவமாகக் கருதும் அணி. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது" என்று மொயீன் அலி நேரடியாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணியின் உண்மையான பிரச்சனை அஸ்வின் இல்லாததுதான் என்று சுட்டிக்காட்டினார். "அஸ்வின் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அணியில் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையானவர்கள் தான். ஆனால் அஸ்வின் அணியில் இருந்தால் அது வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இந்திய மண்ணில் அவர் ஒரு ஜாம்பவான். அவரை இந்தியா ரொம்பவே மிஸ் செய்கிறது" என்று மொயீன் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
கம்பீர் அணியை கட்டமைக்கிறோம் என்று காரணம் சொன்னாலும், திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களைச் சரியாக வழிநடத்தாததே தோல்விக்குக் காரணம் என்று மறைமுகமாகச் சாடியுள்ளார் மொயீன் அலி.