கவுஹாத்தி: "ஒரு வீரரை எப்படி நிர்வகிக்கக் கூடாது?" என்பதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம். இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை இந்திய அணி நிர்வாகம் பந்தாடிய விதம், தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
கொல்கத்தாவிலிருந்து ராஜ்கோட்... மீண்டும் அங்கிருந்து கவுஹாத்தி என சுமார் 3,600 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. வெறும் 2 ஓவர்கள் பந்துவீசுவதற்காக நிதிஷ் குமார் ரெட்டி டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியா ஏ அணியில் விளையாட அனுப்பப்பட்டார். பின்னர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது என்ன வகையான திட்டமிடல்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது நவம்பர் 12 அன்று, நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு காரணம் கேட்டபோது, "அவர் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. எனவே, இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடினால், அவருக்குக் கூடுதல் பந்துவீச்சுப் பயிற்சி கிடைக்கும்" என்று உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் விளக்கம் அளித்தார். இது நியாயமான காரணமாகத் தோன்றலாம். ஆனால் களத்தில் நடந்தது வேறு.
கொல்கத்தாவிலிருந்து நாட்டின் மறுமுனையில் உள்ள ராஜ்கோட்டிற்கு (சுமார் 1,800 கி.மீ) பறந்தார் நிதிஷ். ஆனால், அங்கு இந்தியா 'ஏ' அணிக்காக நடந்த முதல் போட்டியில், அவர் 46-வது ஓவரில்தான் பந்துவீசவே அழைக்கப்பட்டார். நிதிஷ் குமார் வீசியது வெறும் 2 ஓவர்கள் மட்டுமே. அதிலும் 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கில் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
சரி, இந்தியா ஏ அணியின் இரண்டாவது போட்டியிலாவது உருப்படியாகப் பயன்படுத்தப்பட்டாரா? அதுவும் இல்லை. இரண்டாவது போட்டியில் அவர் பந்துவீசவும் இல்லை, பேட்டிங் செய்யவும் இல்லை. சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தார்.
இந்நிலையில்தான், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்குக் காயம் ஏற்பட்டதால், அவசரம் அவசரமாக நிதிஷ் குமார் ரெட்டி மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். இரண்டாவது டெஸ்ட் நடக்கும் கவுஹாத்திக்கு நிதிஷ் குமார் வந்து சேர்ந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் தான் காயத்திலிருந்து மீண்டு வந்திருந்தார். இந்த நிலையில், அவரை விமானத்திலேயே உட்கார வைத்து 3,600 கி.மீ அலைய விட்டிருக்கிறது பிசிசிஐ. "கூடுதல் பந்துவீச்சுப் பயிற்சி வேண்டும்" என்று சொல்லி அனுப்பிவிட்டு, இந்தியா 'ஏ' அணியில் அவரை 8-வது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தியது கேலிக்கூத்து.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கும், இந்தியா 'ஏ' நிர்வாகத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லையா? அல்லது "போய் விளையாடு" என்று மட்டும் சொல்லிவிட்டு, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவலைச் சொல்ல மறந்துவிட்டார்களா? என்ற விமர்சனங்களும் எழுகின்றன.
நிதிஷ் குமார் ரெட்டி ஒன்றும் சாதாரண வீரர் அல்ல; அவர் அடிக்கடி காயங்களுக்கு ஆளாகும் உடல்வாகு கொண்டவர். ஏற்கெனவே கணுக்கால், குடலிறக்கம், முழங்கால் மற்றும் கழுத்து வலி எனப் பல காயங்களைச் சந்தித்து மீண்டு வந்தவர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை இழந்தது போல், மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை இழக்க நாம் தயாராக இருக்கிறோமா? அவரைப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய நேரத்தில், இப்படி நாடு முழுவதும் விமானத்தில் சுற்றவிடுவது என்ன நியாயம்?
கொல்கத்தாவிலேயே இந்திய அணியுடன் தங்கியிருந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தால்கூட, இதைவிட அதிக பந்துகளை அவர் வீசியிருப்பார். பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வும் மிச்சமாகியிருக்கும். கவுஹாத்தி டெஸ்டில் நிதிஷ் குமார் ரெட்டியை எந்தவிதமான உருப்படியான மேட்ச் பிராக்டிஸும் இல்லாமல், தேவையற்ற பயணக் களைப்புடன் களமிறக்குவது பிசிசிஐ-யின் மோசமான திட்டமிடலையே காட்டுகிறது.