கொல்கத்தா: கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா அடைந்த 30 ரன் தோல்வியைத் தொடர்ந்து, ஈடன் கார்டன் ஆடுகளத்தின் தன்மை குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. இந்திய அணி கேட்டுக் கொண்டதால்தான் இப்படி ஒரு சுழல் ஆடுகளம் தயாரிக்கப்பட்டது என்று ஒருபுறம் கூறப்படும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த விவகாரத்தில் பிட்ச் தயாரிப்பாளர் மீது பழி சுமத்தும் வகையில் பேசி இருக்கிறார்.
"ஈடன் கார்டன் ஆடுகளத்தை ஒரு 'டர்னர்' (சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம்) என்று சொல்பவர்களுடன் நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன். அது, தவறான ஆடுகளத் தயாரிப்பால் விபரீதமாக முடிந்த ஒரு ஆபத்தான ஆடுகளம்" என்று அவர் கூறியுள்ளார்.

தனது யூடியூப் பக்கத்தில் இதுகுறித்து விரிவாகப் பேசிய அஸ்வின், ஆடுகளத்தின் தொழில்நுட்பப் பிரச்சனை குறித்தும், இந்திய அணியின் தோல்வி குறித்தும் தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். "ஈடன் கார்டன் ஆடுகளத்தை யாராவது 'டர்னர்' என்று அழைத்தால், நான் அதை ஒரு சதவீதம் கூட ஒப்புக்கொள்ள மாட்டேன். அது, திட்டமிட்டபடி அமையாமல் போன ஒரு தவறான ஆடுகளத் தயாரிப்பு. அது மிகவும் ஆபத்தானதாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்."
"ஆனால், ஈடன் கார்டன் போன்ற மைதானங்களில் நீங்கள் ஒரு உண்மையான 'டர்னர்' ஆடுகளத்தை உருவாக்க முடியாது. அப்படி நீங்கள் ஒரு 'டர்னர்' ஆடுகளத்தை உருவாக்க முயற்சித்தால், அது இதுபோலத்தான் சிதறி, கணிக்க முடியாததாக மாறும்" என்று அஸ்வின் தெரிவித்தார்.
"தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டெம்பா பவுமாவைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்தப் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது, ஆடுகளத்தின் மோசமான தன்மைக்குச் சான்றாகும்" எனவும் அஸ்வின் கூறி இருக்கிறார்,
ஆடுகளம் குறித்த தனது தொழில்நுட்பப் பார்வையைப் பதிவு செய்த அஸ்வின், அதே சமயம் தோல்வியால் துவண்டுள்ள இளம் இந்திய அணிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓர் உதாரணத்தையும் அவர் குறிப்பிட்டார்.
"இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு மிகவும் இளம் அணி. அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நேரம் எடுக்கும். கடந்த காலங்களிலும் இதுபோல நடந்துள்ளது. 2012-ல் நானும், விராட் கோலியும், புஜாராவும் அணிக்கு புதிதாக வந்தபோது, நாங்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரைச் சொந்த மண்ணில் இழந்தோம். ஓர் அனுபவமிக்க இங்கிலாந்து அணியிடம் தோற்றோம். அதன்பிறகுதான், எப்படி விளையாட வேண்டும், எப்படி எதிரணியை எதிர்கொள்ள வேண்டும், நமது ஆட்டத்தை எப்படி மேம்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டோம். எனவே, விமர்சனங்களைச் சற்றுத் தள்ளி வைப்போம். இந்த அணி நிச்சயம் முன்னேறும்" என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.
2012-ல் இந்திய மண்ணில் இங்கிலாந்திடம் அடைந்த அந்தத் தோல்விக்குப் பிறகு, கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகும் வரை, இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.