கவுகாத்தி: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் இன்று பெற்றார். கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை), ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஜவஹல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 50 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் இருந்தனர். தற்போது அந்தப் பட்டியலில் 5-வது வீரராக ஜடேஜா இணைந்துள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் (19 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள ஜடேஜா, 50 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

மொத்த விக்கெட்களில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருந்தாலும், இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் (46 விக்கெட்கள்) தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது ஜடேஜா இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 44 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 விக்கெட்களை வீழ்த்தினால், அஸ்வின் சாதனையை முறியடித்து, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவை அதிகம் அச்சுறுத்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெறுவார்.
2024 டிசம்பரில் அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்தச் சாதனையை முறியடிக்க ஜடேஜாவுக்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. கவுகாத்தி டெஸ்டில் இந்தியா தடுமாறினாலும், ஜடேஜாவின் இந்தத் தனிப்பட்ட சாதனை ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.