கொல்கத்தா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த ஒரு செயலால் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தனது விக்கெட்டை இழந்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு, ஸ்டம்ப் மைக்கில் அவர் கொடுத்த துல்லியமான அறிவுரையின் விளைவாக, அடுத்த பந்திலேயே டெம்பா பவுமா ஆட்டமிழந்தார்.
போட்டியின் முதல் பகுதியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவ் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த தொடக்கத்திற்குப் பிறகு, குல்தீப் யாதவ் பந்துவீச வந்தார். அப்போது, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா களத்தில் இருந்தார். பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்து, நிலைத்து நின்று ஆடக்கூடியவர் பவுமா. எனவே, அவரை விரைவாக வெளியேற்ற வேண்டும் என்ற அவசரத்தில் இந்திய அணி திட்டமிட்டு வந்தது.

அந்த நேரத்தில், விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த துணை கேப்டன் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவிடம் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்கும் வகையில் சில அறிவுரைகளை வழங்கினார். ஸ்டம்ப் மைக்கில் பதிவான அந்த உரையாடலில், பண்ட் குல்தீப்பிடம், "பவுமாவுக்கு ஸ்வீப் ஷாட் ஆடுவதுதான் வழக்கம். அவர் லெக்-சைடுலதான் மாட்டுவார். அந்தப் பக்கமா ஃபீல்டர் ரெடியா இருங்க" என்று துல்லியமாக அறிவுறுத்தினார்.
குறிப்பாக, லெக்-சைடில் ஃபீல்டிங் செய்த வீரர்களை ஒரு கேட்ச் வாய்ப்புக்குத் தயாராக இருக்கும்படி அவர் எச்சரித்தார். ரிஷப் பண்ட் இந்த அறிவுரையைக் கொடுத்த அடுத்த பந்திலேயே, குல்தீப் யாதவ் வீசிய பந்தை பவுமா ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து பேட்டின் உள்விளிம்பில் பட்டு, நேராக லெக்-ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த துருவ் ஜுரெலின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது.
ரிஷப் பண்ட் எதை கணித்தாரோ, அது அப்படியே களத்தில் அரங்கேறியது. தென்னாப்பிரிக்காவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியதற்கான முழுப் பெருமையும் ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனத்திற்கே சென்றது.
ரிஷப் பண்ட்டின் இந்த புத்திசாலித்தனமான வியூகத்தைத் தொடர்ந்து, இந்திய பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையை முற்றிலுமாகச் சரித்தனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 55 ஓவர்களில் வெறும் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியாவின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 14 ஓவர்கள் வீசி, 5 மெய்டன்களுடன் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்க்ரம் (31) மற்றும் டோனி டி சோர்ஸி (24) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் (13*) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (6*) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தற்போது இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 122 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோரை குவித்து, போட்டியில் வலுவான முன்னிலையைப் பெறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.