செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை.
ஆனால், அந்த நிலையை மாற்ற இந்த முறை டெஸ்ட் தொடர் திட்டமிடும் போதே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடியாக ஒரு விஷயத்தை செய்து ரோஹித் சர்மாவுக்கு உதவி இருக்கிறார். அதன் மூலம் டெஸ்ட் தொடரை இழக்காமல் தவிர்க்க முடியும். அதாவது டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனாலும், தொடரை சமன் செய்ய கூடுதல் வாய்ப்பு ஏற்படும் வகையில் பிசிசிஐ தொடரை வடிவமைத்துள்ளது.

இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆடிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடரை கைப்பற்றியதில்லை. ஆனால், 2010 - 11 ஆண்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 1 என சமன் செய்தது. அதுவே தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி செய்த பெரிய சாதனை.
அதன் பின் அங்கே மூன்று டெஸ்ட் தொடர்களில் ஆடி மூன்றிலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. எனினும், இந்திய அணி அங்கு நடந்த நான்கு தொடர்களில் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த ரெக்கார்டை வைத்துப் பார்க்கும் போது, இந்திய அணியால் எப்படியும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும் என உத்தேசமான முடிவுக்கு வரலாம்.
எனவே, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை திட்டமிட்டால் ஒரு ஒரு போட்டியில் மட்டும் வென்று தொடரை கைப்பற்றுவது கடினம். இந்தியாவின் ஒரு டெஸ்ட் வெற்றி ரெக்கார்டின் படி, அதை செய்ய ஒரு டெஸ்ட்டில் வெற்றி பெற்று, இரண்டு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்ய வேண்டும்.
ஆனால், இதே இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் என்றால் ஒரு போட்டியை டிரா செய்து, மற்றொரு போட்டியில் வென்றாலே தொடரைக் கைப்பற்றி விடலாம். இதை அடுத்தே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இரண்டு போட்டிகள் கொண்ட தொடராக மாற்றி விட்டு, ஒரு டெஸ்ட் போட்டி நடக்க வேண்டிய நாட்களில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடத்தப்பட்டு இருக்கிறது.
202ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிந்து விட்டது அடுத்து 2024, ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது, எனவே, இந்த காலகட்டத்தில் அதிக டி20 போட்டிகளில் ஆடுவதே சரியாக இருக்கும். ஆனால், பிசிசிஐ - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு இணைந்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்தி இருக்கிறார்கள்.
ஒரு டெஸ்ட் போட்டிக்கான காலமான ஐந்து நாட்கள் மற்றும் அதற்கு முன், பின் உள்ள இடைவெளி என ஏழு நாட்களில், மூன்று டி20 போட்டிகளை கூடுதலாக ஆடலாம். ஆனால், அப்படி செய்தால் ஆறு டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடராக அது இருக்கும். அதே சமயம், டெஸ்ட் போட்டிக்கு இணையாக மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்தினால் அதிக விளம்பர வருமானமும் கிடைக்கும். இந்தியாவுடன் ஆடும் தொடரில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கும் என்பதால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சொல்லும் வார்த்தைக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பால் எந்த மறுப்பும் அவர்களால் கூறி இருக்க முடியாது.
இதை அடுத்தே இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வகையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இதை நடத்தாமல், ஒரு டெஸ்ட் போட்டியை குறைத்து விட்டு, அதற்கு ஈடு செய்யும் வகையில் மூன்று ஒருநாள் போட்டியை இடைச்செருகலாக கொண்டு வந்து இருக்கிறது பிசிசிஐ. இந்திய அணிக்கு இது ஒரு வகையில் நல்ல வாய்ப்பு தான் தோல்வி அடைவது போல இருக்கும் போட்டியை டிரா செய்ய முயற்சி செய்யலாம். மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடும். ஜெய் ஷா திட்டம் நிறைவேறுகிறதா? என பார்க்கலாம்.