செஞ்சுரியன் : விராட் கோலி விக்கெட்டை விரைவாக எடுத்தால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியால் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக கருதப்படுபவர் விராட் கோலி.

கடந்த முறை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து இருந்தார். அதனால், அவர் இந்த முறையும் அதிக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க அணி வேகப் பந்துவீச்சாளர் ஃபேனி டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சில யோசனைகளை கூறி இருக்கிறார்.
குறிப்பாக விராட் கோலிக்கு எப்படி பந்து வீசக் கூடாது எனக் கூறி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை எச்சரித்து இருக்கிறார். அதே சமயம், விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தும் வழி என்ன என்பது பற்றியும் அவர் பேசி இருக்கிறார்.
"விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்றால் பாரம்பரிய முறைப்படி நான்காவது ஸ்டம்ப்பிற்கு தொடர்ந்து பந்து வீச வேண்டும். அதன் பின் அவர் எப்போது தவறு செய்வார் என காத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் சில சமயம் பந்து எட்ஜ் ஆகி கோலி ஆட்டமிழக்க வாய்ப்பு உள்ளது. இதை செய்வதை விட்டு, அவரை தாக்கும் வகையில் பந்து வீசினால் அவர் நேராக ஆடி ரன் சேர்ப்பார்" என்றார் ஃபேனி டிவில்லியர்ஸ்.
"டெண்டுல்கருக்கு வீசுவது போலத் தான் இதுவும். நேராக பந்து வீசி எல்பிடபுள்யூ ஆகும் என காத்திருப்பது முட்டாள்தனம் ஆகும். ஏனெனில் அவர் மிட் விக்கெட் திசையில் பந்தை அடிப்பார். எனவே, விராட் கோலிக்கு பந்தை ஆஃப் சைடில் நான்காவது ஸ்டம்ப்பிற்கு வீசிவிட்டு பந்தை எட்ஜ் செய்வார் என காத்திருக்க வேண்டும்" என்றார் டி வில்லியர்ஸ். இந்த முறை டெஸ்ட் அணியில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று இருப்பதால் கோலி விக்கெட்டை வீழ்த்தினாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.