ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் முதல் சில பந்துகளில் பவுண்டரி அடிக்கவில்லை. பிட்ச்சை புரிந்து கொள்ள சில பந்துகளை எடுத்துக் கொண்டார்.
பத்து பந்துகளை சந்தித்து ஒரே ஒரு சிக்ஸ் தான் அடித்து இருந்தார். ஆனாலும், அவர் ஆட்டமிழந்து செல்லும் போது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக இருந்தது.
ரிங்கு சிங் அதிரடி பேட்ஸ்மேன், ஃபினிஷர் என பலரும் கூறினாலும், தான் எப்படிப்பட்ட அதிரடி பேட்ஸ்மேன் என்பதை தெளிவான பேட்டிங் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார், இதன் மூலம், மற்ற அதிரடி பேட்ஸ்மேன்களுக்கும், தனக்குமான வித்தியாசத்தை எடுத்துக் காட்டியும் இருக்கிறார்.

மூன்றாவது டி20 போட்டியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த உடன் ரிங்கு சிங் 15வது ஓவரின் துவக்கத்தில் பேட்டிங் இறங்கினார். அப்போது சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். அந்த சூழலில், ஒன்று சூர்யகுமாருக்கு இணையாக அதிரடி ஆட்டம் ஆட வேண்டும், அல்லது அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து தான் ஒதுங்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அதை சரியாக புரிந்து கொண்ட ரிங்கு சிங், முதலில் பிட்ச்சை புரிந்து கொள்ள முயன்றார். அவரால் கடந்த போட்டி போல முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க முடியவில்லை. இந்த நிலையில், பந்துகளை வீணாக்காமல் ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன், இரண்டு ரன் என எடுத்தார் ரிங்கு சிங்.
அவர் சந்தித்த பத்து பந்துகளில் ஒரே ஒரு டாட் பால் மட்டுமே ஆடினார். ஏழு பந்துகளில் எட்டு ரன்களும், ஒரு சிக்ஸரும் அடித்த அவர் பத்தாவது பந்தில் சிக்ஸ் அடித்த முயன்று அவுட் ஆனார். அப்போது அவர் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக இருந்தது.
பல அதிரடி பேட்ஸ்மேன்கள் கடைசி 5 ஓவர்களில் பேட்டிங் செய்யும் போது சிங்கிள் ரன் ஓடுவதை தவிர்த்து விடுவார்கள். பவுண்டரி அடிப்பதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். ஆனால், ரிங்கு சிங் ஒரு பந்தை கூட வீணாக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது இந்த ஆட்டத்தில் தெரிந்தது. இப்படிப்பட்ட்ட வீரரை 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பயன்படுத்துமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.