மும்பை: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதனால் தான் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறி வருகிறது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த இரண்டாவது டி20 போட்டியில் கூட இந்திய அணி மிகப்பெரிய இலக்கை துரத்தியபோது அக்சர் பட்டேல் மூன்றாவது வீரராக களம் இறங்கி 21 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே பவர் பிளேவில் அடித்தார்.

இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா கடுமையாக போராடி 62 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சூழலில் திலக் வர்மா, மூன்றாவது வீரராக களமிறங்கி இருந்தால் அவர் சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றி இருப்பார் என்று ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மசாலாவில் செய்தியாளரிடம் பேசிய திலக் வர்மாவிடம்,இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் அனைவருமே அனைத்து இடத்திலும் விளையாட பழகிவிட்டோம். தொடக்க வீரர்களை தவிர மற்ற அனைவரும் மாறி தான் விளையாடுவோம். 3, 4, 5 அல்லது 6 என எண்ணை எந்த பேட்டிங் வரிசையில் களமிறக்கினாலும் நான் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்ப்பேன்.
இந்த விஷயம் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது தான்.அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அக்சர் பட்டேல் முந்தைய போட்டியில் மட்டுமல்ல, டி20 உலக கோப்பையில் கூட அவர் நடுவரிசையில் களமிறங்கி ரன்களை சேர்த்திருக்கிறார். அவர் அந்த இடத்தில் ஏற்கனவே நன்றாக விளையாடி உள்ளார்.எனவே அதனால் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அணிக்கு எது அன்றைய தினத்தில் நல்லது என்று கேப்டனும் பயிற்சியாளரும் நினைக்கிறார்களோ, அந்த முடிவை அவர்கள் எடுப்பார்கள்.
அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதற்காகத்தான் நாங்கள் குழந்தை பருவத்தில் இருந்து தயாராகி வருகின்றோம். நாங்கள் எங்களுடைய அடிப்படை விஷயத்தில் சரியாக இருக்கின்றோம். மனதளவில் நீங்கள் பலமான வீரராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி உங்களை பின்தொடரும். எனவே என்னை எந்த இடத்தில் களமிறக்கி விட்டாலும், நான் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை தான் யோசிப்பேன் என்று திலக் வர்மா கூறியுள்ளார். திலக் வர்மாவின் இந்த பேச்சு, கம்பீருக்கு எதிர்ப்பானதா? இல்லை ஆதரவானதா என்று ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.